Politics

போதையில் வனத்துறையினரை தாக்கிய இளைஞர்: அதிமுக பின்னணியால் நடவடிக்கை எடுக்காத போலிஸ் - திமுக MLA கண்டனம்!

நரசிபுரம் ஜவ்காடு வனச்சரக பகுதியில், குடிபோதையில் அதிகாரிகளையும் , மக்களையும் தாக்கி , அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களும், ஆளுங்கட்சி பிரமுகரின் பின்னணி கொண்டவர்கள் என்பதால் இவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க வனத்துறை, காவல் துறை உயரதிகாரிகள் தயங்குகின்றனர் என கோவை மாநகர தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நேற்று , 18.07.2020 , கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் ஜவ்காடு பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனக்காப்பாளர் நேருதாஸ் என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலம் வழியாக ரோந்து பணிக்கு சென்ற போது அங்கு நான்கு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து வனப்பகுதியை ஒட்டிள்ள இடத்தில் மது அருந்தக்கூடாது. யானைகள் நடமாடும் பகுதிகள் என்பதால் கீழே வீசப்படும் கண்ணாடி பாட்டில்களால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனக்காப்பாளர் கூறியுள்ளார்.

இதனால் , ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் , மது போதையில் வனக்காப்பாளர் நேருதாஸை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய வனக் காப்பாளர் அருகிலிருந்த விவசாயிகளை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த விவசாயிகள், இது குறித்து கேள்வி எழுப்பிய போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் விவசாயிகளையும் தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு திரண்ட மக்கள், இளைஞர்கள் நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர். மேலும், அவர்கள் 4 பேரும் அவர்கள் வந்த TN07 AE 5310 எண் கொண்ட இன்னோவா காரும், இருட்டுப்பள்ளம் பகுதியிலுள்ள பூலுவம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது

இதில் அந்த இளைஞர்கள் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அப்பகுதியை சேர்ந்த பிரபல ஆளுங்கட்சி பிரமுகருக்கு நெருக்கமானவர்கள் என தெரிய வந்துள்ளது. TN07 AE 5310 எண் கொண்ட இன்னோவா வாகனத்தில் பிரஸ் என பின்புறமும், முன்புறம் அ.தி.மு.க கட்சி கொடியும் கட்டப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, அங்கு வந்த ஆலந்துறை போலீசார் அவர்கள் நான்கு பேரிடம் விசாரித்தனர். வனக்காப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே இடத்தில் நேற்று யானை தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் நான்கு பேரும் அங்கு மது அருந்தி, ரகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களும், ஆளுங்கட்சி பிரமுகரின் பின்னணி கொண்டவர்கள் என்பதால் இவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க வனத்துறை, காவல் துறை உயரதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகிறது.

அலங்கோல அ.தி.மு.க அரசின் அராஜகம் , எதேச்சதிகாரம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இந்த சம்பவம் மேலும் ஒரு உதாரணம் ஆகும். ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக , காவல்துறை இந்த சம்பவத்தை மூடி மறைக்க உடந்தையாக உள்ளது என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. இந்த போக்கு மிகவும் வன்மையாக கண்டிக்கத் தக்கது

இந்த பேரிடர் காலத்தில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, குடிபோதையில் அவர்களை தாக்கி , அத்துமீறி நடந்து கொண்ட அந்த நான்கு இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே , காவல்துறையினர் மேற்படி அத்துமீறல் வழக்கில், உரிய முறையில் விசாரணை செய்து , குற்றவாளிகள் யாராக இருந்தாலும் , அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "மின் கட்டண குறைப்பு போராட்டம் - இரக்கமற்ற அ.தி.மு.க அரசை தட்டி எழுப்புவோம்" - கார்த்திக் எம்.எல்.ஏ