Politics

"ரூ12000 கோடி திட்டத்தில் கண் வைத்த அமைச்சர்; சாதகமான அதிகாரியை நியமித்து விதிமீறல்" - மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் “ஸ்மார் சிட்டி” உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும் தலைமைப் பொறியாளர் திரு நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு - சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் “டம்மி” பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

அமைச்சர் திரு வேலுமணியின் உள்ளாட்சித்துறையில் அவருக்கு வேண்டாத அதிகாரிகள்- ஊழலுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் மற்றும் இதர அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல, வாடிக்கையாக நடைபெற்று வருவதுதான் என்றாலும் - இந்த சட்டவிரோதப் “பணி மாறுதல்” நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் 121 நகராட்சிகளிலும், 15 மாநகராட்சிகளிலும் நடைபெறும் ஊழல்களுக்கு எல்லாம் “முத்தாய்ப்பாக” அமைந்திருக்கிறது.

நடராஜனுக்குப் பதில் சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளரை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமித்துள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு வேலுமணி. “நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சிப் பொறியாளரை நியமிக்கக் கூடாது” என்று தெளிவான சட்ட விதிகள் உள்ளன. இந்த விதியை மீறி – புகழேந்தியை கொண்டு வந்தது ஏன்?

Also Read: "ரூ6600 கோடி கொடுத்தோம் என்கிறார் நிர்மலா - தமிழக அதிகாரிகள் மறுக்கின்றனர்: எது உண்மை?" மு.க.ஸ்டாலின்

சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய புகழேந்தி 30.6.2016 அன்றே ஓய்வு பெற்றவர். அவர் “தலைமைப் பொறியாளராக” ப்பணியாற்றி, ஓய்வு பெற இருந்த நேரத்தில், “பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும்” என்றும், “தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில் முதன்மை தலைமைப் பொறியாளராக தரம் உயர்த்தி வழங்க வேண்டும்” என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் 21.6.2016 அன்று “அவசரக் கடிதம்” எழுதினார்.

அதிலிருந்து 9 நாட்களில் 30.6.2020 அன்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோரியபடியே புகழேந்திக்கு பணி நீட்டிப்பும், முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியும் “ஜாக்பாட்” போல் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு அதே பதவியில் பணி நீட்டிப்பு வழங்குவது வழக்கம். ஆனால் பணி நீட்டிப்பும் வழங்கி - அவருக்கு உயர் பதவியும் வழங்கிய “அதிசயம்” புகழேந்திக்காகவே உள்ளாட்சித்துறை அமைச்சரால் அரங்கேற்றப்பட்டது.

இந்த தரம் உயர்த்தப்பட்ட பதவியில் ஒரு முறை அல்ல- இரு முறை தலா “இரு வருடங்கள்” அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் சென்னை மாநகராட்சியிலிருந்து “நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின்” தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் புகழேந்தி. முதலில் புகழேந்திக்கு பணி நீட்டிப்புக் கோரும் போது “5000 கோடி ரூபாய்க்கு” மேற்பட்ட பணிகளைக் கவனித்து வருகிறார் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதி- அந்த பணி நீட்டிப்பை உள்ளாட்சித் துறை அமைச்சர் வழங்கினார். மூன்றரை வருடங்களுக்கு மேல் அப்பணிகளை அமைச்சர் விரும்பியவாறு, அவருக்கு நிறைவளித்திடும் வகையில், “நேர்த்தியாக(!)” ச்செய்து விட்டு, இப்போது “12 ஆயிரம் கோடி ரூபாய்” திட்டத்தை கண்காணித்து வரும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்”.

இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த “டிரான்ஸ்பர்” ஊழல் கொடிகட்டிப் பறக்க, தனக்குத் தானே உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைத்துக் கொண்ட “பாதுகாப்புக் கவசமாகவே” தெரிகிறது. அது இன்னும் 11 மாதங்கள்தான் என்பது வேறு விஷயம். அதன் பிறகு ஒவ்வொரு உள்ளாட்சித்துறை டெண்டரிலும் நடைபெற்ற ஊழல்களுக்கு திரு வேலுமணி சட்டத்தின் முன் பதில் சொல்லியே தீர வேண்டும்!

இதுவரை சென்னை மாநகராட்சியிலும், தற்போது நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழும் நடைபெறும்/ நடைபெற்றுள்ள ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 17000 கோடி ரூபாய்த் திட்டங்களில் பல திட்டங்கள், மத்திய அரசு தரும் நிதியுதவியின் கீழ் நடைபெறும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு திரும்பத் திரும்ப “பணி நீட்டிப்பு” வழங்கி ஒரு தலைமைப் பொறியாளரை- குறிப்பாக புகழேந்தியையே நியமித்துக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன?

தமிழ்நாடு முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் டெண்டர் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த நடராஜனை சென்னை மாநகராட்சிக்கு மாற்றி- அங்கு “தர நிர்ணய தலைமைப் பொறியாளர்” பதவியில் டம்மியாக அமர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன? 17 ஆயிரம் கோடிப் பணிகளும் முறைப்படி நடக்கிறதா- அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதா? அனைத்துமே புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரிக்க வேண்டியவை!

“எந்த விசாரணைக்கும் தயார்” என்று அடிக்கடி பேட்டியளித்து வரும் முதலமைச்சர் திரு பழனிச்சாமி- இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் குறித்தும்- நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, நியமனங்கள் ஆகியவை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்று கேட்க விரும்புகிறேன்.

ஒருவேளை முதலமைச்சர் திரு பழனிச்சாமி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயங்கினால்- இத்திட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவி இருப்பதால்- பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரியை வைத்து இந்த முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Also Read: "மின் கட்டணத்தில் பகல் கொள்ளை - அமைச்சர் தங்கமணியை யாராவது பார்த்தீர்களா?" - செந்தில் பாலாஜி!