Politics

“சிஸ்டம் சரியில்லனு சொன்னா மட்டும் போதாது” - ரஜினி பேச்சுக்கு திருமாவளவன் ‘நச்’ பதில்!

அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசிவரும் நடிகர் ரஜினிகாந்த், அவ்வப்போது மோடி அரசின் சட்டதிட்டங்களுக்கு ஆதரவாகப் பேசி, மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்து, அதை விளக்கவே செய்தியாளர்களைச் சந்தித்து வந்தார்.

இந்நிலையில், இன்று தனது அரசியல் பயணம் தொடர்பாக அறிவிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், எழுச்சி ஏற்பட்ட பிறகு கட்சி குறித்து அறிவிக்கிறேன் என ‘ஈயம் பூசியும் - பூசாமலும்’ பேசிச் சென்றிருக்கிறார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் தற்போது பேசுபொருளாகி கேலி கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், “கட்சி தொடங்கப்போவதில்லை. அரசியலுக்கு வரப்போவதும் இல்லை என்பதையே இன்றைய பேட்டியின் மூலம் ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

மேலும், எல்லாவற்றையும் சரிசெய்த பின்னர் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், எவராலும் அரசியலுக்கு வரமுடியாது. சிஸ்டம் சரியில்லை எனக் கூறுபவர் அதனை சரி செய்வதற்கு முன்வரவேண்டும். மற்றவர்கள் சரி செய்வார்கள் என எதிர்பார்க்கக்கூடாது எனத் தெரிவித்தார் திருமாவளவன்.

Also Read: “மீன் குழம்பு சட்டியில் சர்க்கரைப் பொங்கல்” - ’பாபா’ கதை சொல்லி ரசிகர்களுக்கு ‘பெப்பே’ காட்டிய ரஜினி !

தொடர்ந்து, பட்டியலின மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே பா.ஜ.க, எல்.முருகனை தமிழக கட்சித் தலைவராக அறிவித்துள்ளது. ஏற்கெனவே பா.ஜ.கவில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இருக்கிறார்கள்.

பட்டியல் பிரிவைச் சேர்ந்தவரை பா.ஜ.க தலைவராக்கினாலும் அதன் சனாதன முகம் என்றும் மாறப்போவதில்லை எனக் கூறிய திருமாவளவன் முருகன் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழகத்தில் 30% அறிவில்லாத பெண்கள்” - ரஜினி சர்ச்சைப் பேச்சு!