Politics

“மோடியை மக்கள் நிராகரிக்கத் தொடங்கிவிட்டனர்; பா.ஜ.கவின் சரிவு ஆரம்பமாகிவிட்டது” - காங்கிரஸ் கருத்து!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் சரிவு தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் இன்று வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், “ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. நாட்டு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டுகின்றன.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஜார்கண்டில் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால், அவர்களை ஜார்கண்ட் மக்கள் நிராகரித்துவிட்டனர்.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாட்டின் அரசியலமைப்பையே சீர்குலைத்து வருகிறது. மக்களின் எண்ணங்களுக்கு மாறாக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இவை ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தெளிவாக எதிரொலித்துள்ளது.

பிரதமர் மோடி அரசின் நாட்கள் தற்போது எண்ணப்படுகின்றன. மத்திய பா.ஜ.க அரசின் சரிவு தொடங்கிவிட்டது. இன்று மாணவர்களும், இளைஞர்களும் தெருவுக்கு வந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். ஏராளமான பொதுமக்களும் இணைந்து போராடுகின்றனர்.

இந்தப் போராட்டம் இனி வரும் காலங்களில் மேலும் அதிகமாகும். இதன் மூலம், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆட்சியை நடத்தவில்லை என்ற மக்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “எதிரிகளால் ஒழிக்க முடியாமல் போன நமது பொருளாதாரத்தை மோடி ஒழித்துவிட்டார்” : டெல்லியில் ராகுல் ஆவேசம்!