Politics

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை துவங்கலாமே?” : நீதிமன்றம்

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குறிப்பிட்ட காலத்தில், அவருக்கு சொத்து மதிப்பு குறிப்பிட்ட அளவை விட 8 சதவீதம் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை ஏன் தொடரக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.