Politics

“அது ரஜினியோட அடுத்த பட டைட்டிலா இருக்கும்” - கே.எஸ்.அழகிரி கிண்டல்!

“மக்கள் அதிசயத்தைக் காண்பார்கள் என ரஜினிகாந்த் சொன்னது புதிய திரைப்படத்துக்கான தலைப்பாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. நேரடி முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என உச்ச நீதிமன்றத்தில் அரசு கூறியது. ஆனால் இப்போது, மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறுகிறது. மக்கள் பங்களிக்காத எந்தத் தேர்தலும் மக்களுக்குப் பயனளிக்காது.

மறைமுக தேர்தல் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும். பண பலம், அதிகார பலத்தைக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றும் முறை ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. கொல்லைப்புறம் வழியாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற அ.தி.மு.க நினைக்கிறது.

மறைமுக தேர்தலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். நானும் அதனை செய்கிறேன் என சொல்வது முதல்வருக்கு அழகல்ல. மு.க.ஸ்டாலின் செய்ததைத்தான் நானும் செய்வேன் எனச் சொன்னால் அ.தி.மு.கவை கலைத்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தி.மு.கவில் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டராகிவிடலாம்.

மக்கள் பணி என்பது வேறு, அரசியல் என்பது வேறு. ரஜினியும் கமலும் சேர்ந்து வந்தாலும் அரசியலில் ஜொலிக்க முடியாது. 2021-ல் மக்கள் அதிசயத்தை காண்பார்கள் என ரஜினிகாந்த் சொன்னது அவரது புதிய திரைப்படத்துக்கான தலைப்பாக இருக்கலாம்.” எனத் தெரிவித்தார்.

Also Read: "ரஜினியும், கமலும் இதில் எனக்கு ஜூனியர்கள்தான்” - டி.ராஜேந்தர் பேட்டி!