Politics

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் : ஆளும் அ.தி.மு.க அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - கே.பாலகிருஷ்ணன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ''உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு எடுத்த முடிவின்படி தி.மு.க கூட்டணியுடன் போட்டியிடுவது என முடிவு செய்து எங்களுடைய ஆதரவை தெரிவிக்க வந்துள்ளோம்.

மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவித்துவிட்டு அ.தி.மு.க அரசு நேற்று இரவு திடீரென மாநகராட்சி மேயர் மறைமுகமாக தேர்ந்தெடுப்பதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆளும் அ.தி.மு.க அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் யாராவது வழக்கு தொடுப்பார்கள், அப்படி வழக்கு தொடர்ந்தால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி விடலாம் என எண்ணுகிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

மறைமுகமாக மேயரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர்களை குதிரை பேரம் மூலமாக அவர்களை வளைக்க ஏதுவாக இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளார்கள்'' எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தி.மு.க பொருளாளர் துரைமுருகன், கழக உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.