Politics

''புதிய கல்விக்கொள்கை அல்ல ; புதிய புல்டோசர் கொள்கை'' - மாநிலங்களவையில் வைகோ கடும் தாக்கு!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை அடுத்து கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019’யை அண்மையில் வெளியிட்டது.

இந்த கல்விக் கொள்கை வரைவு இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (21.11.2019) மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. அப்போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எழுந்து குறுக்கிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ''நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடியபோது, இந்தக் கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது.

இது புதிய கல்விக் கொள்கை அல்ல, மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை ஆகும்.

நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன்'' எனக் கேள்வி எழுப்பினார்.