Politics

அரசு விழாக்களில் தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டியதால் வழக்குப்பதிவு!

அரசு விழாக்களில் பங்கேற்க தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என மாவட்ட ஆட்சியரை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ரகுபதி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சமீபத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய, திருமயம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ரகுபதி, “என்னுடைய தொகுதியில் நடைபெறும் குறைதீர் முகாமில், எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “கூட்டுறவு வாரவிழாவிலும் எம்.எல்.ஏ என்ற முறையில் அழைப்பிதழில் பெயர் போடவில்லை. அழைப்பும் விடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம்தான் முறையிட முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியரோ அ.தி.மு.க மகளிரணி மாவட்ட செயலாளர் போலச் செயல்படுகிறார்” என விமர்சித்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ அவதூறாகப் பேசியதாக அ.தி.முக வழக்கறிஞர் ஷேக் திவான் என்பவர் அளித்த புகாரின் பேரில் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ மீது 4 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை நகர போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “என் தொகுதி மக்களின் மனுக்களை அ.தி.மு.க அமைச்சர்கள் நிராகரிக்கின்றனர்”- தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!