Politics

“தமிழகத்தில் காலூன்றவே திருவள்ளுவரைப் பிடித்துக் கொண்டு நடிக்கிறது பா.ஜ.க” - திருமாவளவன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.கவுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பணியாற்றும் என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ளது. தற்போது நடக்கும் என கூறப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் சாதி மத அடையாளத்திற்கு அப்பாற்பட்டவர். உலகமே போற்றும் திருவள்ளுவரை மத அடையாளத்திற்குள் திணிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க காலூன்ற வேண்டும் என்ற நோக்கிலேயே தமிழின் மீதும் திருவள்ளுவர் மீது உரிமை கோருவது போல் நடிக்கிறார்கள். திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 11ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே மோடி தொடர்ந்து சாதகமாக செயல்பட்டு வருகிறார். அவரது பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு வர முடியாது பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.