Politics

கருத்துரிமை என்பது ஆட்சியில் இருப்பவர்கள் விரும்புமாறு பேசும் உரிமையல்ல, குடிமக்களின் உரிமை:திருமாவளவன்!

நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய எழுத்தாளர் ராமசந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசுவின் பெயரால் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தக் கோரி இயக்குனர் மணிரத்தினம், வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கூட்டாகக் கடிதம் ஒன்றைக் கடந்த ஜூலை மாதத்தில் பிரதமருக்கு எழுதியிருந்தனர்.

அது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகக் கூறி பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இவர்கள் அனைவர் மீதும் தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மக்களின் கருத்துரிமையைப் பறிப்பதாகும். மத்திய அரசு தலையிட்டு இந்த வழக்கை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் அனுப்பப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் உள்ளிட்ட எவருக்கும் இந்திய நாட்டு குடிமக்கள் எவரும் கடிதம் எழுதுவதற்கு உரிமை உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கருத்துரிமை என்பது ஆட்சியில் இருப்பவர்கள் விரும்பும் கருத்துகளைப் பேசுவதற்கான உரிமை அல்ல, குடிமக்கள் தாம் நினைக்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையாகும்.

இந்த கருத்துரிமையை நீதித்துறையைப் பயன்படுத்தியே பறிக்க முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகும் இந்தப் போக்கை அனுமதிப்பது ஜனநாயகத்தை பாழ்படுத்திவிடும்.

பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் எந்த ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தியோ, யாரையும் புண்படுத்தக் கூடிய செய்தியோ இல்லை. நாட்டில் அப்பாவி மக்கள் பசுவின் பெயரால் படுகொலை செய்யப்படுகின்றனர். அது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதியும்; 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளிலும் பிரதமர் மோடி அவர்களே பசுவின் பெயரிலான வன்முறையைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்.

அத்தகைய வன்முறையாளர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியிருக்கிறார். இந்தத் தகவலை 2018 ஜூலை மாதத்தில் மாநிலங்களவையில் மத்திய உள்துறை துணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பிரதமர் பேசிய அதே கருத்தை கடிதத்தில் தெரிவித்தவர்கள் எப்படி தேசத்துரோகிகளாவார்கள்?

மணி ரத்தினம் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்யவும், கருத்துரிமையைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் அனுப்புவதென முடிவுசெய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.