Politics

“நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?” - முத்தரசன் கேள்வி!

சிறுபான்மை மக்களைப் பாதுகாத்திடுங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய எழுத்தாளர் ராமசந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பிரதமருக்குக் கடிதம் எழுதியது தேசத் துரோக குற்றமா என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள பிரதமருக்கு கடிதம் எழுதி தங்களது கருத்துகளைக் கூறுவதற்கு உரிமை உண்டு. அத்தகைய கடிதங்களுக்கு பிரதமர் தனது அலுவலகம் வாயிலாக பதில் அனுப்புவது கடமையாகும். ஆனால் இன்று பிரச்னை தலைகீழாக உள்ளது மட்டுமல்ல, மிக அபாயகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் அவர்களுக்கு பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, அனுராக் காஷ்யப், அடுர் கோபாலகிருஷ்ணன், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் நாட்டில் நடைபெற்று வரும் விரும்பத்தகாத படுகொலைகள், தாக்குதல்கள், இஸ்லாமிய மற்றும் தலித் மக்களுக்கு எதிரான கூட்டுக் கும்பல் தாக்குதல்கள் குறித்து கடிதம் எழுதினர்.

கடிதத்திற்கான ஆதாரமாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவல் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றது: கடந்த 2016ம் ஆண்டில் தலித் மக்களுக்கு எதிராக 840 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மிகக் குறைவே.

2018 அக்டோபர் முதல் 2019 ஜனவரி 1 வரை மதரீதியாக 254 வெறுப்புக் கொலைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 579 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கண்ட ஆதாரத்தைச் சுட்டிக்காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

“குற்றங்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், குற்றம் புரிந்தோர் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள். இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உத்தரவாதம் அளிக்கின்றது” என்ற பதில் பிரதமரிடமிருந்து வருவதற்கு மாறாக, கடிதம் எழுதியது குற்றம், அவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தி வழக்குப் பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்குப் பதிவு செய்திருப்பது என்பது எந்த ஒரு ஆட்சியிலும் நடந்ததாகத் தெரியவில்லை.“இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்” என்று, ஜார் மன்னன் ஆட்சி குறித்து பாரதி பாடியதுதான் நினைவுக்கு வருகின்றது.

நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? என்ற ஐயப்பாட்டை இவ்வழக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசத் துரோக வழக்கு பதிவு செய்திருப்பதை கண்டிப்பதுடன் இதனை திரும்ப பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.