Politics

“மதவெறியை ஊட்டி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது பா.ஜ.க” : பகவத் கீதை சர்ச்சைக்கு முத்தரசன் கண்டனம்!

மத்தியில் மோடி அரசு அமைந்த நாள் முதல், நாட்டு மக்களிடையே மதம் சார்ந்த கொள்கைத் திணிப்புகளும், அது தொடர்பான வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. இதுபோன்ற செயல்களை இந்துத்வா கும்பல் செவ்வனே செய்து வருகிறது.

அந்த வகையில், கல்வித்துறையிலும் தங்கள் மதவாதத்தை புகுத்த தொடங்கிய பா.ஜ.க அரசு, பள்ளிப் பாடத்தில் மதம் சார்ந்த கேள்விகளைத் திணித்திருந்த நிலையில், அதற்கு ஒரு படி மேலே சென்று அண்ணா பல்கலையின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை பாடமாக புகுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “மத்திய அரசில் உள்ள பா.ஜ.க. தனது சொந்த விருப்பங்களையும், எதிர் விளைவுகளை உருவாக்கும் கொள்கைகளையும், நாட்டு மக்களின் மீது திணித்துவிட பல்வேறு வகையில் நிர்ப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் பகவத்கீதை படித்திட வேண்டும் என்பதாகும்.

அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளது. காலம் காலமாக போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் மதச்சார்பின்மை என்ற உயரிய கொள்கையைச் சீர்குலைத்து, ஒரு நாடு, ஒரு மதம் என்ற வகுப்புவாத மதவெறியூட்டும் கொள்கையை அமல்படுத்தி, குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது.

மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அடிபணியக் கூடாது. பகவத் கீதை புகுத்தப்படுவது கைவிடப்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.