Politics

“சுபஸ்ரீ செத்ததுக்கு அவரது விதியே காரணம்” - மனசாட்சி இல்லாமல் ஜால்ரா போடும் பிரேமலதா விஜயகாந்த் !

அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்கிற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்.,12ம் தேதி சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்கிற 23 வயது இளம்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு நீதிமன்றம் முதல் அரசியல் தலைவர்கள் வரை இதுகாறும் கண்டங்களும், எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும், சுபஸ்ரீ உயிரிழந்ததற்கு #WhoKilledSubhaShree #AdmkKilledSubhaShree மற்றும் #JusticeForSubhaShree என்ற ஹேஷ்டேக்குகள் மூலம் பொதுமக்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், ஆவடியில் நேற்று நடந்த தே.மு.தி.க பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “சுபஸ்ரீயின் உயிரிழப்பு யதார்த்தமாக நடந்தது தான். இப்போதெல்லாம் பேனர் வைக்காதவர்களே இல்லை. அதில் எதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது. அ.தி.மு.க பேனர் விழுந்ததாலேயே இது இவ்வாறு பேசப்படுகிறது. காற்றில் பேனர் விழுந்து, தண்ணீர் லாரி அந்த சுபஸ்ரீ பெண் மீது மோதவேண்டும் என்று விதி இருக்கிறது. அதனால்தான் அந்த பெண் உயிரிழந்திருக்கிறார்” என்று பேசியுள்ளார்.

பிரேமலதாவின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கூட்டணியில் தங்களது இடத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மாநில அந்தஸ்தை இழந்த தனது கட்சியை எப்படியாவது அதிமுகவுக்கு ஆதரவாக பேசி மீட்டுவிடலாம் என்ற மனக்கோட்டை கட்டி இவ்வாறு அவர் முட்டுக்கொடுத்து பேசியுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.

முன்னதாக, பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் செய்தியாளர்களை ஒருமை திட்டியும், பேசியும் பிரேமலதா சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.