Politics

'வந்தே மாதரம்' பாடலை ஏற்காதவர்கள் இந்தியர்கள் இல்லை : சர்ச்சையை கிளப்பிய சாரங்கியின் பின்னணி என்ன ?

பா.ஜ.க அரசின் மத்திய அரசின் இணை அமைச்சர் சாரங்கி புவனேஸ்வரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது , இந்தியாவின் தேசிய பாடலான ’வந்தே மாதரம்’ பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல முறை இப்படி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கியின் கடந்தகால பாதையை சற்று அலசி பார்ப்போம்.

ஒடிசா மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாமியார் பிரதாப் சந்திர சாரங்கி மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ‘ஒடிசாவின் மோடி’ என பா.ஜ.க-வினரால் வர்ணிக்கப்படும் இவரது கடந்த காலம் கருப்புப் பக்கங்கள் நிறைந்தது.

1999-ம் ஆண்டு, ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸும் அவரது இரு மகன்களும் எரித்துக் கொல்லப்பட்ட நேரத்தில், பஜ்ரங் தள் அமைப்பின் ஒடிசா மாநிலத் தலைவராக இருந்தவர்தான் இந்த பிரதாப் சந்திர சாரங்கி.

2002-ல் ஒடிசா சட்டமன்றம் வலதுசாரி இயக்கங்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட வன்முறைச் சம்பவத்தில் கைதாகி சிறைக்குச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வன்முறைச் செயல்களின் பின்னணியில் செயல்பட்ட இவர்தான் இன்றைக்கு ‘ஒடிசாவின் மோடி’ என்றழக்கப்படுகிறார்.

இவர் முன்னதாக நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அவர், “வந்தே மாதரத்தை ஏற்க மறுப்பவர்களுக்கும், நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்கும் இந்த நாட்டில் வாழ உரிமை இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், பாரத மாதாவுக்கு எதிராக யாராவது இருந்தால் அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். பிரதாப் சந்திர சாரங்கி மட்டுமின்றி பா.ஜ.க அமைச்சர்கள், தலைவர்கள் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி வருவது தொடர்கதையாக உள்ளது.