Politics

“மோடியை ‘டாடி’ எனக்கூறும் அமைச்சருக்கு அரசியல் நாகரிகத்தை கத்துக்கொடுங்க முதல்வரே”- காங்கிரஸ் வேண்டுகோள்!

அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருந்தார். ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜேந்திர பாலாஜியை அரசியல் கோமாளி என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களும், தமிழக முதல்வரும் கற்றுத்தர வேண்டும் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் தானே அதிமேதாவியாகவும், தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்ற தலைக்கனத்தோடு உளறி வருபவர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதான் என்பதை மக்கள் நன்கறிவார்கள்.

பித்துப்பிடித்தவர் போல் பேசி வரும் இவர் சோனியா காந்தியை பெண்ணென்றும் பாராமல் ஒருமையில் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் அரசியல் நாகரிகம் மறந்து பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை மறந்து தனது பதவியைக் காப்பாற்ற மோடியின் காலில் விழுந்து மோடியை ‘டாடி’ என்று அழைத்தவர் ராஜேந்திர பாலாஜி. அவருக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் அ.தி.மு.க முன்னணித் தலைவர்களும், தமிழக முதல்வரும் கற்றுத்தர முன்வர வேண்டும். கீழ்த்தர விமர்சனம் தொடர்பாக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

மாண்புகளை மறந்து நாகரிகமற்றுப் பேசித் திரியும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போன்றோரை நாட்டு மக்கள் வருங்காலங்களில் புறந்தள்ள வேண்டும். இதே அருவருக்கத்தக்க பாணியில் தொடர்ந்து விமர்சித்து வந்தால் அரசியல் ரீதியான விபரீத விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.