Politics

“அரசு முடியப்போகும் தருணத்தில் அரசு செலவில் சுற்றுலா செல்கிறார்கள்” : திருமாவளவன் சாடல்!

அரசு முடியப்போகும் தருணத்தில் அமைச்சர்கள் அரசு செலவில் வெளிநாட்டு சுற்றுலா செல்வதாகத் தெரிவித்துள்ளார் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.சொக்கலிங்கம் தனது ஆசிரியர் பணியை நிறைவுசெய்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்த தொல்.திருமாவளவன் எம்.பி., விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இதனால் வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த மக்களின் சதவிகிதத்தைப் பொறுத்து உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு இத்திட்டம் சிக்கலை உண்டாக்கும் என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்படுவார் என சமூக வலைதளங்களில் பரவி வரும்  கருத்துகள் குறித்து கேட்கப்பட்டதற்கு பா.ஜ.க தலைவர் யாரென்று அறிவிக்கட்டும்; அதன் பின்பு அது குறித்துப் பேசலாம் எனக் குறிப்பிட்டார்.

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வினை வன்மையாகக் கண்டித்த திருமாவளவன், காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். சுங்கச்சாவடி தொடங்கப்பட்டது குறித்த தகவல் பலகைகளை சுங்கச்சாவடி முன்பு வைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வரும், அமைச்சர்கள் வெளிநாடு செல்வது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், “திடீரென அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதுமையாக இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அமைச்சர்கள் சுற்றுப்பயணம்  செய்யவில்லை. அரசு முடியப்போகிற தருணத்தில் அமைச்சர்கள் அரசு செலவில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்றார்.