Politics

“தலைவராக தகுதிவாய்ந்த உறுப்பினரே பா.ஜ.க-வில் இல்லையா?” - திருநாவுக்கரசர் கேள்வி!

திருச்சி மதுரை கோட்டத்தில் நடைபெறும் எம்.பி-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ப.சிதம்பரம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், அ.தி.முக அமைச்சர்களின் விமர்சனம் மத்திய பா.ஜ.க அரசை மகிழ்ச்சிப்படுத்துவதற்குதான் என்றும் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை வழிமொழிவதை அ.தி.மு.க அமைச்சர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்றார்.

மேலும் பேசிய அவர், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றியவர் ப.சிதம்பரம். வழக்குகள் போடப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை. நிரூபிக்கப்பட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “நெடுஞ்சாலை சுங்க வரி உயர்த்தப்பட்டது கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் இல்லை. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரும் நிலையில் பொருளாதார வீழ்ச்சி நாடு முழுவதும் உள்ளது. அதைப்பற்றி கவலைப்படாமல் மக்களிடம் இருந்து எதன் மூலம் பணம் பறிக்கலாம் என்ற முயற்சியை பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது.

விளம்பரத்திற்காக அறிவிப்புகளை வெளியிடும் பா.ஜ.க நாட்டின் உண்மையான பொருளாதார முன்னேற்றத்திற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு முழுமையாக அமலுக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால் அரசியல் தலைவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருப்பர். அங்கு இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை. மத்திய அரசு அதை மறைக்க முயற்சி செய்கிறது.” எனக் குறிப்பிட்டார்.

பா.ஜ.க-வின் தலைவராக ரஜினிகாந்த் நியமிக்கப்படுவாரா எனும் கேள்விக்குப் பதிலளித்த திருநாவுக்கரசர், “ரஜினிகாந்த் பா.ஜ.க-வின் உறுப்பினரே கிடையாது. ஒரு கட்சியின் உறுப்பினராக இல்லாத நபர் தலைவராக முடியாது. பா.ஜ.க-வில் தலைவரை நியமிக்கும் அளவிற்குக் கூட தகுதியான உறுப்பினர் இல்லையா?” என கேள்வி எழுப்பிய அவர், அகில இந்திய பா.ஜ.க தலைவர் பதவி கொடுத்தால் கூட நடிகர் ரஜினிகாந்த் அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே” எனத் தெரிவித்தார்.