Politics

“இனி விஜயகாந்த் நமக்கு வேண்டாம்” -  கூட்டணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தே.மு.தி.க! : பிரேமலதா காரணமா ?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜயகாந்தின் தே.மு.தி.க 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி அடைந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது தே.மு.தி.க.

மேலும், மாநில கட்சி என்கிற அந்தஸ்திற்கு குறைந்தபட்சம் 6 சதவிகித வாக்குகளையாவது ஒரு கட்சி பெறவேண்டிய நிலையில், தே.மு.தி.க வெறும் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதால் மாநில கட்சி என்கிற பெருமையையும் இழந்தது. தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் தே.மு.தி.க-வில் இருந்து எந்த சத்தமும் இல்லை.

இந்த அவமானகரமான தோல்விக்கு, கட்சியின் பொருளாளராக உள்ள பிரேமலதாவும், அவரது சகோதரர் சுதீஷின் நடவடிக்கைகளும் தான் காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் விமர்சித்து வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தே.மு.தி.க-வின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அண்மையில் கூட அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க பெரிதளவில் பரப்புரைக்காக எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளான அ.தி.மு.க அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் எதிர்வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க-வை கூட்டணியில் இருந்து ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, தேர்தல் கூட்டணி அறிவிக்கும் சமயத்திலேயே யாருடன் கூட்டணி என்பதை தெரிவிக்காமல், ஆதாயம் தேடி தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளின் கதவைத் தட்டிய சங்கதி அம்பலமானது, தே.மு.தி.க. தொண்டர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுஇப்படி இருக்க, கூட்டணியில் இருந்து தே.மு.தி.க-வை விலக்கினால் அக்கட்சியின் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தலுக்குப் பிறகு இத்தனை நாட்கள் ஆகியும் எந்தவித கட்சி நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

இதனால், கட்சி இருக்கிறதா? அல்லது கலைக்கப்பட்டு விட்டதா? என்று தெரியாமல் அக்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், அ.தி.மு.க-வின் இந்த முடிவு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விமர்சனங்கள், தகவல்கள் அனைத்தும் பிரேமலதாவுக்கு தெரிந்தும் அவர் அமைதி காப்பது ஏன்? என விரக்தியில் உள்ள தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: தி.மு.க தலைவரை சந்தித்த விவசாய சங்க தலைவரை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறை - பழிவாங்கும் அதிமுக அரசு!