Politics

திராவிட இயக்கத்தை கட்டிக் காக்கும் அரணாக ம.தி.மு.க இருக்கும் - கலைஞர் நினைவிடத்தில் கண் கலங்கிய வைகோ

முத்தமிழறிஞர், தி.மு.க தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து கலைஞரின் நினைவிடத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ, ”அண்ணா மறைவிற்கு பிறகு தி.மு.க.வை எஃகு கோட்டையாக உருவாக்கி கட்டி காத்தவர் கலைஞர்.

நெருக்கடி காலத்தில் கழகத்தை கட்டி காத்தவர், நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவிற்கே வழிகாட்டியவர் தலைவர். தமிழ் மொழி செம்மொழி ஆக காரணமாக இருந்தவர் கலைஞர். அவர் மறைந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.

கலைஞர் இறப்பதற்கு முன்பே அவரைச் சந்தித்து தளபதி ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொன்னேன். அப்போது என் கைகளை பற்றிக்கொண்டார். நாட்கள் உருண்டோடினாலும் இன்றும் அதே உணர்வோடு இருக்கிறேன்.

திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கும், தி.மு.க தொண்டர்களுக்கும், ம.தி.மு.க-விற்கும் உள்ளது. திராவிட இயக்கத்தை காக்க ம.தி.மு.க படை அரணாக இயங்கும். கடல் அலையின் ஓசை கேட்கின்றவரை கலைஞர் புகழ் நிலைத்திருக்கும்'' என தெரிவித்தார்.