Politics

கர்நாடகாவின் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா? குமாரசாமி? - தேவகவுடா பதில்!

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸும், ம.ஜ.தவும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தது.

ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே அதிருப்தி எழுந்ததை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க திட்டமிட்ட பா.ஜ.க., ஆபரேசன் லோட்டஸை செயல்படுத்தி குதிரை பேரம் நடத்தி காங்கிரஸ், ம.ஜ.தவில் இருந்து 15 பேரும், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் அம்மாநில அரசியலில் குழப்பம் சூடு பிடித்தது.

இதனையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பா.ஜ.கவின் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இதற்கிடையில், ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ்குமார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பிரதமரும், குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடா, எதிர்காலத்தில் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கூட்டணி தொடர்வது குறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும்.

மேலும், இந்த ஆட்சி முடியும் வரை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸின் சித்தராமையா இருப்பார் எனவும் குமாரசாமி, ம.ஜ.தவின் சட்டப்பேரவைத் தலைவராக செயல்படுவார் என தெரிவித்தார். இதற்கிடையில், இன்று கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார்.