Politics

கர்நாடகாவில் மேலும் 14 பேர் தகுதி நீக்கம் : சபாநாயகரின் தப்புக் கணக்கால் எடியூரப்பாவுக்கு அதிர்ஷ்டம் ?

கர்நாடகாவில் ஆளும் கூட்டணி அரசு மீதான அதிருப்தியால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் குழப்பமும், பதற்றமும் நிலவியது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு 99 வாக்குகளையும், பா.ஜ.க 105 வாக்குகளையும் பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்கு வித்தியாசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி தவறியதால் கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் சபாநாயகர் ரமேஷ்குமார் இடம் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரையடுத்து, கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் சுயேச்சை எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருவர் என மொத்தம் மூன்று அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தார். மேலும், மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீதான நடவடிக்கை குறித்து இரு தினங்களில் அறிவிக்கப்படும் சபாநாயகர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ்குமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும், அவரது கட்சி கொறடாக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் தற்போது 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பான்மைக்கு தேவையான எண்கள் குறையும்.

தற்போதைய நிலவரப்படி, கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 (நியமன எம்.எல்.ஏ தவிர்த்து) எம்.எல்.ஏ.,க்கள் உள்ள நிலையில், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது 207 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இதனால், பெரும்பான்மை எண்ணாக 105 உள்ளது. பாஜகவுக்கு தற்போது 105 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் எடியூரப்பாவால் எளிதாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். மேலும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் எடியூரப்பாவுக்கு உள்ளது. இதனால், அவரின் ஆட்சி நிலைப்பதில் தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.