Politics

கர்நாடக பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு... ம.ஜ.த எம்.எல்.ஏக்களுக்கு தூண்டில் போடும் எடியூரப்பா!

கர்நாடகாவில் கூட்டணி அரசாக காங்கிரஸும், ம.ஜ.தவும் இருந்தபோது 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவும், 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அரசு தெரிவித்த ஆதரவை வாபஸ் பெற்றதாலும் அம்மாநில அரசியலில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இதன் பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இதனையடுத்து நேற்று ஆளுநர் மாளிகையில் கர்நாடக மாநில முதலமைச்சராக பா.ஜ.கவின் எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

எடியூரப்பாவுடன் எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை. ஆனால், ஒரு வார காலத்திற்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் உத்தரவிட்டுள்ளார்.

பதவியேற்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, வருகிற திங்கள் கிழமை நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும், பெரும்பான்மை நிரூபித்த பின்னர் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களை தனது வலையில் இழுப்பதற்கான முன்னெடுப்புகளை பா.ஜ.க. தரப்பு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.