Politics

சமஸ்கிருதம் தமிழை விட தொன்மையானதா ? : பா.ஜ.க.,வின் சதிக்கு அ.தி.மு.க சலாம் போடுகிறது - திருநாவுக்கரசர்

அவசரகதியில் சட்ட மசோதாக்களை கொண்டு வர பா.ஜ.க. அரசு துடிக்கிறது என திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பி திருநாவுக்கரசர் பேசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் பல்வேறு சட்ட மசோதாக்களை திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது பா.ஜ.க. அரசு.

முத்தலாக், ஆர்.டி.ஐ., போன்ற சட்டங்களை பிடிவாதமாக கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களின் விருப்பத்திற்கு மாறாக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கர்நாடகாவில் ஆட்சியமைத்து பா.ஜ.க. ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டுள்ளது.

தென்னிந்தியாவில் ஜனநாயகத்துக்கு எதிராக சட்டவிரோதமாகவும், கொள்ளைப்புறம் வழியாக பா.ஜ.க. நுழைந்துள்ளது. இது நிச்சயம் நிலைக்காது, நீடிக்காது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சமஸ்கிருதம் பழமையான மொழி என குறிப்பிட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இம்மாதிரியான திணிப்புகள் மூலம் தமிழ் மொழியின் சிறப்பினை எவராலும் குறைத்து விட முடியாது என்று கூறிய அவர், இது போன்ற செயல்களுக்கு உடந்தையாக மாநில அரசு இருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.

மேலும், தன்னுடைய நிலைப்பாட்டை ராகுல் காந்தி மாற்றிக்கொள்ளாததால் ஒருவாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்த கேள்விகள் முடிவு கிடைக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.