Politics

23 வருடங்களுக்குப் பிறகு மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய முதல் கேள்வி என்ன தெரியுமா?

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தி.மு.கவை சேர்ந்த சண்முகம், பி.வில்சன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் கேள்வி நேரத்தின்போது, ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ துணைக்கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் பேசியதாவது, ''அவைத்தலைவர் அவர்களே 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. பருத்தி மற்றும் பஞ்சின் விலை திடீர் திடீரென ஏற்றம் இறக்கமாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி ஆகிறது.

தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன. மற்ற மாநிலங்களில் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை டுப்பாரா'' என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்திற்கு அனுப்புகிறார்கள். அங்கு அந்த நாட்டு முத்திரை பதித்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறார்கள். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன, இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றார். அதற்கு வைகோ, உங்கள் பதிலில் திருப்தி இல்லை எனத் தெரிவித்தார்.