Politics

எனக்கு முதல்வர் பதவி தேவை இல்லை..ஆனால், கர்நாடக அரசியலை பா.ஜ.க கேவலப்படுத்தி இருக்கிறது : குமாரசாமி

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பா.ஜ.க தொடர்ந்து பல வகையில் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் இந்த கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.,க்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.

இதனால் கர்நாடகா அரசியல் பரபரப்பானது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் உருவானது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி ஆட்சியை கைபற்றவேண்டும் என அம்மாநில பா.ஜ.க கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

பா.ஜ.க.,வின் இந்த சூழ்ச்சியை அறிந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை கோரினர். இதனால் பா.ஜ.க.,வினர் சட்டமன்றத்திற்கு உள்ளேயே படுத்து உறங்கி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.,கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துக் உருக்கமான கடிதம் ஒன்றை அம்மாநில முதல்வர் குமாரசாமி எழுதினார்.

அந்த எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ நமது கர்நாடக அரசியலை பா.ஜ.க தாழ்வான இடத்தில் தள்ளி உள்ளது. அதுமட்டுமின்றி, பா.ஜ.க.,வின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த மாநில மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் பலவந்தமாக இழுத்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது. இந்த சட்டவிரோத செயலை செய்யும் பா.ஜ.க.,வினர் தான், என்னை பதவியில் இருந்து வெளியேற சொல்கிறார்கள். மேலும் ராஜ்பவன் உதவியுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை உடனடியாக நடத்திவிட வேண்டும் என சபநாயகருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

நான் இங்கே ஒன்றை தெளிவுபடுத்த விருக்கிறேன். எனக்கு இந்த பதவியிலே இருக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் இங்குள்ள ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பின் கொள்கைகளை சிதைத்து, அதனை எப்படியாவது தகர்த்தெறிய வேண்டும் என எண்ணும் பா.ஜ.க.,வை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவதே என நோக்கம்.

ஆதலால் தயவுகூர்ந்து எங்களிடம் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வாருங்கள். மேலும் இந்த ஜனநாயகத்தை நாசப்படுத்தி புனிதத்தைக் கெடுத்துள்ள செயல்களை நீங்கள் சட்டமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்” என அவர் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனிடையே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இரண்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

இந்நிலையில், இன்றே நம்பில்லையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.