Politics

“பொதுத்துறையை தனியார்மயமாக்கும் மோடி ஒரு நாள் நாட்டையே விற்கப் போகிறார்” : ஆதிர் ரஞ்சன் அதிரடி!

பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்பரேட் வசம் ஒப்படைப்புதுஎன பல உதவிகளை முனைப்புடன் செய்து வருகிறது. ஏன் அண்மையில் கூட மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தனது விசுவாசத்தைக் காட்டும் வகையில் பல சலுகைகளை அறிவித்துள்ளது.

மேலும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து பா.ஜ.க அறிவித்துள்ளது. இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாத ஒரு மெத்தனப்போக்குடன் பா.ஜ.க செயல்படுகிறது என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாவதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று, காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “அடுத்த 5 வருடத்துக்குள் ரயில்வே துறைக்கு ரூ. 50 லட்சம் கோடி செலவிடப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டின் போது தெரிவித்திருந்தார்.

modi

ஆனால், இதற்கு முன்னதாக சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிடப்படும் என கூறினாரே? அந்த ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்ன ஆனது? ரயில்வே பட்ஜெட்டின் மூலம் நீங்கள் முதலீடுகள் செய்யப்போவதாக சொல்வது, படுத்து உறங்குவதற்கு பாய் கூட இல்லாத தற்போதைய நிலையில் ஒய்யாரமாய் தூங்குவதற்கு கூடாரத்தை தேடுவது போல உள்ளது” எனப் பேசினார்.

மேலும் பேசிய அவர், ரயில்வேயின் செயல்பாட்டு விகிதம் கடந்த 2017 - 2018ல் 98.4 சதவிகிதமாகும், இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என்ன வெனில், இது அரசு மதிப்பீட்டை விட அதிகமாகும். ஆனால், வருவாய் மற்றும் செலவுகள் என்பது அதிகாரப்பூர்வ தகவல்களை விட குறைவாகவே உள்ளது. இது தான் நீங்கள் செல்லும் வளர்ச்சியா? என கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையில் அதிக லாபம் சம்பாதிக்க முடிகிற தொழிற்சாலைகளைக்கூட தனியார்மயமாக்க அரசு முயற்சிப்பது சரியல்ல. ரயில்வே என்பது சமூக உறுதிப்பாடு. அது வெறும் வணிக ரீதியிலான அமைப்பு மட்டுமல்ல என்பதை இந்த அரசு உணரவேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து, அதன் இலக்குகளை அடைய முடியாமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. விமானத் போக்குவரத்துத் துறை அமைச்சர் ‘ஏர் இந்தியா’வை விற்க திட்டமிட்டுள்ளார். ரயில்வே அமைச்சர், ரயில்வே துறையை தனியார் மயமாக்கத் துடிக்கிறார். பிரதமர் மோடியோ, ஒரு நாள் நாட்டையே விற்கப் போகிறார். எனப் பேசியுல்ளார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.