Politics
ராஜினாமாவை ஏற்க மறுத்ததால் கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் கர்நாடகாவில் அரசியல் குழப்பம் அடுத்த நிலையை எட்டியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 10 பேர் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
ஹோட்டலில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்துவதற்காக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் சென்றிருந்தபோது அவரை உள்ள செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் மாநிலத் தலைவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என மும்பை காவல்துறை தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். தங்களுக்கு வந்த அந்த கடிதத்தை காட்டியே சிவக்குமாருக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
எனினும், சிவக்குமார் தான் அந்த ஓட்டலில் உள்ள அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், அதனால் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க கர்நாடக சட்டப்பேரவை தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். நேரில் வந்து ஆட்சி மீதான அதிருப்தி குறித்து தகுந்த விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, மும்பையில் உள்ள கர்நாடக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் 10 பேரும் தங்களது ராஜினாமாவை ஏற்காத சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுவதாகவும், திட்டமிட்டே ராஜினாமாவை ஏற்கவில்லை எனவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
Also Read
-
“நிர்வாகிகளின் உணர்வு என்ன? உண்மை என்ன? அது மட்டும்தான் எனக்குத் தேவை!” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
“காதலிக்கு பரிசு கொடுக்க ஆடுகளை திருடிய த.வெ.க பிரமுகர்” : வழக்குப் பதிவு செய்தாத காவல்துறை!
-
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் த.வெ.க அமைச்சர் : ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகப் புகார்!
-
“நீட் எனும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி எப்போது?” : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
இலாகா இல்லாத அமைச்சர்கள் : தேங்கிக்கிடக்கும் கோப்புகள் - அலட்சியத்துடன் இருக்கும் த.வெ.க அரசு!