Politics

அரசு வங்கிகளில் தான் மோசடிகள் அதிகம் : முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் விளக்கம்

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனுக்குப் பிறகு பொறுப்பேற்றவர் உர்ஜித் படேல், மோடியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர் தனது பதவி காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா முடிவிற்கு மத்திய பாஜக அரசின் அழுத்தமே காரணம் என குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

வங்கிகளில் 50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்கள் பட்டியலை வெளியிடவில்லை என்று இவருக்கு, மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த பட்டியலை வெளியிடக்கூடாது என்பதில் பா.ஜ.க முக்கிய அமைச்சர்களின் தலையீடு இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவத்தில் ஏற்கனவே வகித்த பேராசிரியர் பணியில் மீண்டும் சேர்ந்தார்.

இதனிடையே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி மாநாட்டில் ‘இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை’ என்பது பற்றி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அந்த உரையின் போது அவர் பேசியதாவது, “அரசு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி நடந்த சம்பவங்கள் அதிகரிப்புக்கு காரணம். மேலும் வங்கிகளின் இடர் மேலாண்மை, உள் கணக்கு தணிக்கை போன்றவை மிகவும் மோசமாக இருந்ததே காரணம்.

இந்தியாவில் 90 சதவீத மோசடி சம்பவங்கள் அரசு வங்கிகளில்தான் நடந்துள்ளன. வாராக்கடன் சுமை அதிகரிப்பும், மோசடி செய்தவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க உரிய நேரத்தில் வங்கிகளும், அரசும் நடவடிக்கை எடுக்காததே மிக முக்கிய காரணம். இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தது. மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் வராக்கடன் சுமை அதிகமாக உள்ளது.

இதற்கு காரணம் வங்கிகள் தனது கையிருப்புகளை முதலீடு விகிதத்தைவிட, கடன் கொடுத்த விகிதம் அதிகம். அதனால் வராக்கடன் சுமை ரூ. 10 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது. அதன் பின்பு மிக தாமதமாக மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் நிலைமை சரி செய்யப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.இது பா.ஜ.க மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.