Politics

“தமிழக நலனுக்காக தொடர்ந்து செயல்படுவேன்” : வேட்புமனு தாக்கல் செய்த வைகோ பேச்சு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியிடுவதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க சார்பாக வழக்கறிஞர் வில்சன் மற்றும் தொ.மு.ச சண்முகம் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன் மற்றும் தொ.மு.ச சண்முகமும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியிடுகின்றனர்.

இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின் வேட்பாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் தமிழகத்துக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் எனத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது : “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியதால் நான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறேன். ம.தி.மு.க-வின் லட்சோப லட்சம் தொண்டர்களின் சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பினைப் பெற்றால் தமிழக நலனுக்காகவும், தமிழக வாழ்வாதாரங்களைக் காப்பதற்காகவும், தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துகிற மத்திய அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதற்காகவும், ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு அணைந்து போகாமல் காப்பதற்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவேன் எனும் உறுதியை அளிக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.