Politics

வைகோவிற்கு சிறைத் தண்டனை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்!

தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக திரு வைகோ மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கில் சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசத்துரோக சட்டப் பிரிவை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்துவரும் நேரத்தில் சிறப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கி இருப்பது வேதனை அளிக்கிறது.

124 ஏ என்ற தேசத்துரோக சட்டப்பிரிவு எந்த பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டதோ அந்த இங்கிலாந்து நாட்டிலேயே இப்போது சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது அப்படி இருக்கும்போது காலனிய கால ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அந்த சட்டப்பிரிவை சுதந்திர இந்தியாவில் பயன்படுத்துவது பொருத்தமற்றது .

வைகோ அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்குத் தடையாக இல்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. எனினும், அரசாங்கத்துக்குப் பிடிக்காதவர்கள் எவரையும் இந்த தேசத்துரோகக் குற்றம் சாட்டி முடக்கிவிடலாம் என்ற ஆபத்து நிலவுவது சனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம் '' இவ்வாறு தெரிவித்துள்ளார்.