Politics

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா? மக்களவையில் சோனியா காந்தி ஆவேசம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலி நகரில், ரயில் வண்டி பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பா.ஜ.க அரசு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தொடரில் சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,"ரயில்வே தொழிற்சாலையை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கை, பொதுத்துறையும் தனியார்மயமாக்கும் நோக்கத்தின் முதல்படியாகும். தனியார்மயமாக்குவதன் மூலம் பெரும் வேலைவாய்ப்பின்மை உருவாகும். இந்த தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ” ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்திற்கு முன்னோடியாக ஏராளமான பணத்தை முதலீடு செய்து ரேபரேலியில் உள்ள அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஏன் இன்றுகூட மிகக்குறைந்த செலவில் தரமான ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில், 2ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள், தனியாரிடம் தொழிற்சாலைச் சென்றால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். மேலும் இதை தற்போது தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

அரசின் செயல்பாடுகளும், பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கமும் மக்களுடைய நலன்களை பொறுத்து தான் அமையவேண்டும். பெரும் முதலாளிகளை ஆதரிக்கும் முதலாளித்துவத்தை பொறுத்து இருக்க கூடாது என்று சாடினார்.

அதுமட்டுமின்றி, பி.எஸ்.என்.எல் நிறுவனம் பெரும் நஷ்டத்தில் அரசால் தள்ளப்பட்டுள்ள நிலைமையை சுட்டிக்காட்டி, “ மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவின் கோவில்கள் என்று பெருமையாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று அந்த கோவில்களுக்கு ஆபத்து நெருங்கியிருப்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. அதனால் அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிடவேண்டும்” என்று சோனியா காந்தி தெரிவித்தார்.