Politics

மோடிக்கு பயந்தே கேரள அரசு கொடுத்த தண்ணீரை வாங்க மறுத்துள்ளது அ.தி.மு.கஅரசு: கனிமொழி எம்.பி

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை போக்காமல் ஆட்சியையும் கட்சியையும் காப்பதற்காக மட்டுமே அவ்வப்போது டெல்லிக்கு படையெடுக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து சென்னையில் நாடாளுமன்றக்குழுத் துணைத்தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துக்கொண்டார்.

சென்னை துறைமுகம், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவினருடன் ஏராளமான மக்களும் கலந்துக்கொண்டு தண்ணீர் பிரச்னையை போக்காத எடப்பாடி அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் குறியீடாக காலிக்குடங்களே இருக்கிறது. ஆண்களும், பெண்களும் ஒருவாய் தண்ணீருக்காக காத்துக்கிடக்கின்றனர். தமிழகத்தின் அவல நிலை உலகெங்கும் உற்றுநோக்கி பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், எடப்பாடியின் அ.தி.மு.க அரசோ தண்ணீர் பஞ்சமே இல்லையென நாடகமாடி வருகிறது." என்றார்.

மேலும், “கேரள அரசு தண்ணீர் தர முன்வந்தாலும் மோடிக்கு பயந்து, அவர் கோபித்துக்கொள்வார் என்பதற்காக மக்களை மென்மேலும் துயரத்திற்கு ஆழ்த்தி வருகிறது துப்புக்கெட்ட எடப்பாடி பழனிசாமி அரசு” என குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”குடிநீர் பிரச்னைக்கு இடைக்கால, நிரந்தர தீர்வை தேடாத ஆட்சியே தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது. இது ஒழிக்கப்பட வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கான நிரந்தர தீர்வைக் காணுவார்.” என்று உறுதியளித்தார்.