Politics

தனது அரசை விமர்சித்த மன்மோகன் சிங்கை பழிவாங்கும் மோடி? : ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 14 ஊழியர்களை தனது அலுவலகத்தின் சீரான செயல்பாட்டிற்காக தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என பலமுறை வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளது மோடியின் பிரதமர் அலுவலகம்.

மன்மோகன் சிங்கின் 14 ஊழியர்கள் ஐந்து பேராகக் குறைக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட உதவியாளர்கள் இருவர், ஒரு கீழ் பிரிவு எழுத்தர், மற்றும் இரண்டு பியூன்கள் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்பதற்கு நான்கு நாட்கள் முன்பு உத்தரவிடப்பட்டது.

2004 - 2014 என அரசாங்கத்தை தொடர்ச்சியாக இரண்டு முறை வழிநடத்திய மூத்த காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்படும் சலுகைகளை பிரதமர் மோடி மறுத்துவிட்டார் என்று மே 26 அன்று பிரதமர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் (1991-1996) ஆட்சிக்காலத்தில், அனைத்து முன்னாள் பிரதமர்களும் பதவியில் இருந்து விலகிய பின்னர் ஐந்து ஆண்டுகள் அமைச்சரவை அமைச்சரின் சலுகைகளுக்கு உரிமை பெறுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த வசதிகளில் 14 பேர் கொண்ட செயலக ஊழியர்கள், இலவச அலுவலக செலவுகள், மருத்துவ வசதிகள், ஆறு உள்நாட்டு நிர்வாக வகுப்பு விமான டிக்கெட்டுகள் உள்ளிட்டவை அடங்கும்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் ஒரு தனிப்பட்ட உதவியாளரையும் பியூனையும் மட்டுமே வைத்திருக்க முடியும். இருப்பினும், அப்போதிருந்து, முன்னாள் பிரதமர்களின் வேண்டுகோளின் பேரில் நன்மைகள் நீட்டிக்கப்பட்டன என்று மரபு உள்ளது.

சட்டதிட்டங்களை மதிக்காத பா.ஜ.க முதன்முறையாக இதில் விளையாடுகிறது எனப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். முந்தைய அரசாங்கங்கள் இந்த விதியை மாற்றியமைத்து, முன்னாள் பிரதமர்களான வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் 14 ஊழியர்கள் வைத்துக்கொள்ளும் காலத்தை நீட்டித்துள்ளன.

2004-ல் பதவியில் இருந்து விலகிய மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு 2009 வரை 14 ஊழியர்களின் செயலக உதவி வழங்கப்பட்டது. மேலும் அவரது அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முழு ஊழியர்களையும் 2014-ம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்திருந்தார். இந்த ஊழியர்கள் 2018 ஆம் ஆண்டில் அவரது மறைவு வரை தொடர்ந்தனர் என்றுஅதிகாரி கூறியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தாண்டு பிப்ரவரியில், பிரதமரின் முதன்மை செயலாளருக்கு ஒரு குறிப்பு மூலம் தனது ஊழியர்களின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு கோரினார். எந்த பதிலும் கிடைக்காததால், மீண்டும் மார்ச்சில் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அப்படியும், அவருக்கான சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மன்மோகன் சிங், மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கொள்ளை என விமர்சித்தார். அதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் மன்மோகன் சிங்கின் ஊழியர்களை திரும்பப் பெற்றிருக்கிறது மோடி அரசு.