Politics

''ஒரே நாடு ஒரே தேர்தல்'' என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது - சீதாராம் யெச்சூரி !

நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையைக் கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது. ''ஒரே நாடு, ஒரே தேர்தல்'' என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று பிற்பகலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ், தி.மு.க, தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ.பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி , இந்திய கம்யூ.பொது செயலாளர் சுதாகர் ரெட்டியும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் என்பது அரசியலமைப்புச்சட்டம் வழங்கி உள்ள அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரத்தையே சேதப்படுத்துவதாகும்.

சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் இருக்கும் தொழில்நுட்ப சிக்கல்களை தவிர்த்து இத்திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. நாடாளுமன்ற ஜனநாயக முறையின் வேரினை பாதிக்கும் என்ற உண்மையின் அடிப்படையில் எங்களின் எதிர்ப்பு உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 75(3)ன்கிழ் மக்களவைக்கு அமைச்சரவை குழுவுக்கும், அதேபோல அரசியலமைப்பு பிரிவு 164(1)ன்கீழ், சட்டப்பேரவைக்கும், அமைச்சரவைக் குழுவுக்கும் கூட்டுப்பொறுப்பு இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்தாலோ அல்லது மசோதாவில் பெரும்பான்மையை இழந்தாலோ அந்த அரசு ராஜினாமா செய்ய கடமைப்பட்டுள்ளது. எந்தவிதமான மாற்று அரசும் பதவி ஏற்க முடியாது. அரசு கலைக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மக்களவையோ அல்லது சட்டப்பேரவையோ கலைக்கப்படாலாமல், நம்பிகத்தன்மையை இழக்காமல் இருந்தால், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 83(2), பிரிவு172(1) ஆகியவற்றின் கீழ் 5 ஆண்டுகள் செயல்பட வேண்டும். மக்களவை அல்லது மாநிலச் சட்டப்பேரவையின் வாழ்நாளை குலைக்க நேர்ந்தால், அது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானது, ஜனநாயகத்துக்கும் விரோதமானது. தாங்கள் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் முழுமையாக 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அதன் மூலம் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தலாம் என்று நிதி ஆயோக் அமைப்பு ஆலோசனை அளித்துள்ளது. செயற்கையாக எந்த விதமான முயற்சிகள் செய்து ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சித்தால் அதற்கு முழுமையாக எதிர்ப்போம். இந்த திட்டம், ஏற்கனவே இருக்கும் நாடாளுமன்ற ஜனநாயக முறையையும் சேதப்படுத்திவிடும்.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.