Politics
யாருக்கு யார் ஆப்பு வைக்கப்போகிறார்கள் ? : உச்சகட்டத்தில் எடப்பாடி - பன்னீர் பனிப்போர் !
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கிடையே மோதல் போக்கு தலைதூக்கியுள்ளது கண்கூடாகத் தெரியத் தொடங்கியுள்ளது. அதற்கு இன்று நடைபெற்ற நிகழ்வே சாட்சி.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரவில்லை.
இணைந்த கைகளாக எப்போதும் எடப்பாடியுடன் ஒன்றாகவே இருக்கும் ஓ.பி.எஸ் இன்று இல்லாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும், ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்வையிடும் பணியில் ஜெயலலிதா சமாதியில் ‘தர்மயுத்த’ தியானம் செய்து துணை முதல்வர் பதவியைப் பெற்ற ஓ.பி.எஸ் இல்லாதது அ.தி.மு.க-வினர் மத்தியிலும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, ஓ.பி.எஸ் தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அது அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தருவதில் இருவருக்கும் மோதல் போக்கு நிலவிவந்தது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலர் ஒற்றைத் தலைமை வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கினர்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை மிரட்டி, கட்சிக்குள் குழப்பம் இருப்பதாக ஊடகங்களில் காட்டிக்கொள்ளவேண்டாம் என உத்தரவிட்டதோடு, அ.தி.மு.க-வினரை விவாதங்களுக்கு அழைக்கவேண்டாம் என ஊடகங்களையும் மிரட்டியது அ.தி.மு.க தலைமை.
கட்சிக்குள் நிலவி வரும் பனிப்போரை அவர்கள் மறைக்க முயன்றாலும், வெளி நிகழ்வுகள் மூலமாக கடைநிலைத் தொண்டன் வரை இந்த விஷயங்கள் தெரிந்திருக்கிறது என்பதே உண்மை.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!