Politics

மோடியின் அமைச்சரவையில் தி.மு.க? - 'தினமலர்' பொய்ச் செய்தியை மறுத்து டி.ஆர்.பாலு பதிலடி!

பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பெற போகிறது எனக்கூறி பொய்யான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளேட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.கழக பொருளாளர் டி.ஆர்.பாலு.

அறிக்கையில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டதாவது,

"நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று.

அந்த நடைமுறை வழக்கப்படியே நாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், இணை அமைச்சர் அர்ஜூன்ராம் அவர்களும் என்னுடன் கலந்து பேசியதும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்.

அவர்கள் என்னிடம் பேசிய போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெறியப்படுத்தினர்.

ஆனால் ஆறு மாதம் கழித்து தி.மு.க உறுப்பினர்கள் பா.ஜ.கவின் மத்திய அமைச்சரசையில் இடம் பெறுவார்கள் என்ற தினமலர் (09-06-2019) நாளேட்டின் யூகச்செய்தி கடைந்து எடுத்த கலப்படமற்ற பொய். தினமலர் நாளேட்டிற்கு திரிபுவாதமும் திருகுதாளமும் புரிவது தினசரி பழக்கம் ஆகிவிட்டது.

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் - அவரின் அடியொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஓளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண்கள் என்பவற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயக குருடர்களுக்கு வேலை இல்லை" என டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.