Politics

முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி!

மக்களவை தேர்தலோடு ஆந்திரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது.

175 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், ஆட்சியமைக்க 88 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

பாஜக ஒரு தொகுதியிலும் மற்ற தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் முன்னணியில் உள்ளன. இதேபோல் மக்களவை தேர்தலில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸே முன்னிலையில் உள்ளது.

இன்று மாலைக்குள் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வரும் 25ம் தேதி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் சட்டமன்ற தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், 30ம் தேதி முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெற்றி குறித்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி “இந்த வெற்றியானது மக்களின் வெற்றி. இது எதிர்பார்த்ததுதான். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என கூறியுள்ளார்.