Politics
விவசாயிகளின் கண்ணீர் நெஞ்சை உலுக்குகிறது - ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வைகோ எச்சரிக்கை!
தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அனைத்துக்கட்சி விவசாய சங்கங்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் நிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, ‘மாதானம் திட்டம்’ என்ற பெயரில் ஓ.என்.ஜி.சி. ஆழ்துளை கிணறுகளை அமைத்து, பணிகள் தொடங்கியுள்ளது. இங்கு எடுக்கப்படும் கச்சா எண்ணெய் நாள்தோறும் 20 லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது செல்லப்படுகிறது. இந்தக் கிணறுகளின் வாயிலாக ரசாயனக் கலவைகளை பூமிக்குள் செலுத்துவதால் சுற்றியுள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் பாழாகி வருகின்றன. நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுவிட்டது.
விவசாயிகள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 ஆம் தேதி, குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தியுள்ளனர். மேலும் நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம். இவ்வாறு பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பள்ளத்தை எளிதில் சமன் செய்யவும் முடியாது.
மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு அதிகாரிகள் கவலையின்றி அலட்சியப்போக்குடன் செயல்படுவதால், கெயில் நிறுவனம் தமது விருப்பம் போல விளைநிலங்களைச் சீரழிக்கும் பணியைச் செய்து வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கண்முன்னே அழிவதைப் பார்த்து விவசாயிகள் கதறி அழுது கண்ணீர் வடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.
காவிரி டெல்டாவிலும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் - பின்னணி?
-
பரந்த விரிந்த மனப்பான்மையாளர் : முதலமைச்சரின் செம்மொழி இலக்கிய விருது அறிவிப்பிற்கு கி.வீரமணி வரவேற்பு!