Politics

தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை மன்னிக்க மாட்டார்கள் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி ! 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-

"மத்திய அரசு காவிரி டெல்டாவை அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படும் போது அதனுடன் தேர்தல் உறவு வைத்திருக்கும் அதிமுக ஹைட்ரோ கார்பன் குறித்து வெளிப்படையாகப் பேச மறுப்பது வன்மையாகக் கண்டிக்க தக்கது.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ் நாட்டில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு நிரந்தர தடை விதித்திருக்கிறார். அதை அரசின் கொள்கை முடிவாகச் செயல்படுத்தி இருக்கும் போது, தற்போது அதனை ரத்து செய்ய வேதாந்தாவும் ஓஎன்ஜிசி யும் தமிழக அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த அனுமதியை அளிப்பாரானால் அது ஜெயலலிதாவிற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை மன்னிக்க மாட்டார்கள்."