Politics
எடப்பாடி அரசைக் காப்பாற்றவே 3 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க கோரிக்கை! - வைகோ கண்டனம்!
3 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கக் கோரிக்கையை பேரவைத் தலைவர் புறந்தள்ள வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்த காரணத்தால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் 2017 செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
சட்டமன்றத் தலைவரின் இந்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்ததால், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் காலி என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இருக்கின்றது. மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில்தான் மேலும் மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி கொறடாவும், சட்ட அமைச்சரும் சட்டமன்றத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன், அ.பிரபு ஆகிய மூவருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீசு அனுப்பி இருக்கின்றார். இவர்கள் மூவரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான முன்னோட்டமாகவே இந்த நடவடிக்கைக் கருதப்படுகிறது.
கட்சித் தாவல் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசியல் சட்டத்தில் இடம் இருந்தாலும், எடப்பாடி பழனிச்சசாமி அரசு பதவியில் நீடிப்பதற்காகவே பேரவைத் தலைவரிடம் ஆளும் கட்சி கொறாடா புகார் செய்து இருக்கிறார்.
மே 23 ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் எதிரானதாகவே இருக்கும் என்பது வெள்ளிடைமலையாகத் தெரிந்துவிட்டது.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கப் போவது உறுதி ஆகிவிட்டது. எனவே எப்பாடு பட்டாவது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்கத் துடிக்கின்றது.
சட்டமன்ற மரபுகளைப் பேணிக் காக்க வேண்டிய பேரவைத் தலைவர், ஆளும் கட்சியின் அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் ஜனநாயகம் புதை குழிக்குப் போய்விடும் என்பதை உணர்ந்து, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கக் கோரிக்கையை ஏற்காமல் புறந்தள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார் வைகோ.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!