modi
Politics

பணமதிப்பிழப்பு; ஆர்.பி.ஐ இயக்குநர்களின் கருத்தை ஏற்க மறுத்த மோடி 

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று இரவு 8 மணி அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இனிமேல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியதோடு, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது என தற்போது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெங்கடேஷ் நாயக் என்பவர், தகவல் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்.

பிரதமர் பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழுவுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.அந்த ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் தற்போதைய கவர்னருமான சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அப்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க இருப்பதாக பிரதமர் தெரிவித்த கருத்தை ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் சிலர் ஏற்க மறுத்து, அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாகவும், எனவே அவற்றைச் செல்லாது என அறிவிப்பதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் சிலர், கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்கள் பெரும்பாலும் அதை ரொக்கமாக வைத்திருக்கவில்லை என்றும், அது ரியல் எஸ்டேட், தங்கம் எனச் சொத்துகளாக வைத்துள்ளதாகவும் கூறினர். எனவே, 500 மற்றும் 1000 ரூபாயைச் செல்லாது என்ற அறிவிப்பு இந்தச் சொத்துகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளனர்.

மேலும், பொருளாதாரம் விரிவடையும் வேகத்தைக் காட்டிலும் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அது பணவீக்கத்தில் சரி செய்யப்பட்டுவிடும் என்றும், சிறிதளவு இருக்கும் வித்தியாசம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கறுப்புப் பணம் என்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம்தான் என்றாலும், 400 கோடி ரூபாய் அளவுக்கே அது உள்ளது என்றும், புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது மிகச் சிறிய எண்ணிக்கைதான் என்றும் ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு தடையால் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற அரசு தரப்பின் வாதத்தைப் பொது நலன் கருதி ஏற்று,பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இதுதொடர்பாக 5 வாரங்கள் கழித்து 2016 டிசம்பர் 15-ம் தேதிதான், ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்டதும் ஆர்.டி.ஐ. தகவலில் அம்பலமாகியுள்ளது.மேலும், செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் 99 விழுக்காடு திரும்ப பெறப்பட்டதாக 2 ஆண்டுகளுக்குப் பின் ரிசர்வ் வங்கி அறிவித்தது.