உணர்வோசை

'No comments - இங்கு எதுவுமே சரியில்லை - எல்லாருமே திருடன்': இப்படி பேசுவதே 'அரசியலற்ற' அரசியல்தான்!

இந்தியாவின் முக்கியமான சித்தாந்தங்கள் நான்கு. அம்பேத்கரியம், திராவிடம், மார்க்ஸியம் மற்றும் ஆரியம். இதில் ஆரியம் என்பதுதான் எதிரி எனில் மற்ற சித்தாந்தங்களை துணை கொள்ளல் மட்டுமே எதிரிக்கு எதிரான சமர் ஆக இருக்க முடியும். அதை விடுத்து 'எல்லா சித்தாந்தங்களுமே தப்பு' என பேசி apoliticalலாக, issue based அரசியல் நிகழ்த்துவது, இச்சமூகத்தில் இருக்கும் status quoவை நீடிக்க வைப்பதற்கான வேலை மட்டுமே.

இன்றைய அளவில் இந்தியாவை பொறுத்தவரை இரண்டுதான் மிக முக்கியமான பிரச்சினைகள். கார்ப்பரெட் மூலதனம் மற்றும் ஆரியம்.

இரண்டுக்கும் எதிராக நிற்கும் சித்தாந்தங்கள் மூன்றுதான். மார்க்சியம், அம்பேத்கரியம் மற்றும் திராவிடம். இவை இல்லாத எது பேசினாலும் அது ஆளும் வர்க்கத்துக்கே ஏதுவாக போய் முடியும்.

உலக மூலதனம் தனக்கான சந்தை நாடுகளில் நவதாராளமய காலத்துக்கு பிறகு கடைப்பிடித்து வரும் உத்தி, 'அரசியலற்ற' அரசியல். Being apolitical!

'இங்கு எதுவுமே சரியில்லை. எல்லாருமே திருடன். எதையுமே மாற்ற முடியாது. சித்தாந்தங்களே வீண். ஊழல் மட்டும்தான் பிரச்சினை' என பேசுவதெல்லாம் இந்த ரகம்தான். நன்றாய் ஆழ்ந்து நோக்கினால், நமக்கான இந்த சிந்தனை எப்போதிருந்து எங்கிருந்து தொடங்கியது என்பதை துலக்கமாக அறிந்து கொள்ள கூட முடியும். கார்ப்பரெட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் போதோ, கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையிலோ, நவதாராளமயத்துக்கு பின் எடுக்கப்படும் பெருமூலதன திரைப்படங்களிலோ ஊடகங்களிலோ இருந்துதான் இவ்வகை குரல் நம் தொண்டையை தொற்றியிருக்கும்.

ஏன் இந்த குரல் நம்மை வசீகரிக்கிறது? ஏன் நாம் ஈர்ப்பு கொள்கிறோம்?

ஏனெனில் அந்த குரல் ஒலிக்கும் இடங்களில் நாம் சம்பாதிக்கிறோம். அந்த குரல்கள் பார்ப்பனீய பீடத்திலிருந்து வருவதால், அதிகாரத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விழைகிறோம்.

இன்னொரு பாணியும் இருக்கிறது.

நவதாராளமயம் கொடுக்கும் தனிமனிதவாதமும் முதலாளித்துவம் கொடுக்கும் அவநம்பிக்கையும் ஒருங்கே கலக்கும் ஆபத்தான பாணி. இருக்கும் அரசியல்களுக்கு மாற்றாக ஓர் அரசியலை தேர்ந்தெடுப்பதாக நினைத்துக் கொண்டு அபத்தமான, இயங்கியல் அடிப்படையற்ற ஓர் அரசியலை எடுத்துக் கொண்டு அதுவே சரியென வாதிடும் பாணி. உலக வல்லாதிக்க அரசியல் சூழல், பிராந்திய வல்லரசு போட்டி என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தனக்கு புரிந்த ஓர் உன்னதத்தை வெறும் கனவாகவே நீட்டித்து தனக்கான தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ளும் போக்கு!

உங்களின் அரசியல் நிலை மிகவும் exclusive ஆக, inclusivity கிஞ்சித்தும் இல்லாத நிலையில் இருந்தால்தான், முதலாளித்துவத்துக்கு எதிரான அரசியல் இருக்காது; திரளாது. அப்படி திரண்டால், அந்த நிலையுடனும் உரையாடவோ சமரசம் செய்து கொள்ளவோ முதலாளித்துவம் இறங்கி வர வேண்டிருக்கும். பதிலாக நவதாராளமயம் கொடுக்கும்

தனிமனிதவாதத்தை கொண்டு அரசியல் நிலையை யோசிக்க வைத்தால், அமைப்பாயும் திரள மாட்டீர்கள். அரசியல் உரையாடலுக்கும் வர மாட்டீர்கள். ஒன்றிரண்டு பேருடன் உச்சாணி கொம்பில் உட்கார்ந்து கொண்டு சமூகத்தையும் அரசியலையும் பார்த்து வெற்று வாய்ச்சவடால் மட்டும் (armchair criticism) பேசிக் கொண்டிருக்கும் தனிமனிதவாத அரசியல்வாதி ஆகியிருப்பீர்கள். வருபவனை போகிறவனை எல்லாம் முத்திரை குத்தி, அடையாளத்துக்குள் நுழைத்து ஒடுக்கி, ஒரு பிரயோஜனமும் இல்லாத ஒரு சாதாரணன் என்றாக்கிவிட உங்கள் வாழ்க்கையின் மொத்த ஆற்றலையும் செலவழிப்பீர்கள்.

மறுபக்கத்தில் தாராளமயம் அதன் வேலையை செவ்வனே முதலாளித்துவத்துக்கு செய்து கொடுத்துக் கொண்டு இருக்கும், உங்களின் இடையூறு இல்லாமல்!

Page3 படத்தில் சமூக அழுக்குகளை விமர்சித்து, அதை புறக்கணிக்க யத்தனிக்கும் நாயகியிடம் இன்னொரு கதாபாத்திரம் சொல்லும் முக்கியமான வசனம் ஒன்று உண்டு.

"We have to be 'in' the system to 'change' the system!"

ஓர் அமைப்புக்குள் இருப்பதாலேயே அந்த அமைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டதாக பொருள் ஆகாது. அதை மாற்றவோ அல்லது புதிதாய் ஒன்றை நிர்மாணிக்க விரும்பினாலுமே கூட உள்ளுக்குள் இருந்துதான் இயங்க வேண்டும்.

Also Read: கேட்காத செவிகள் கேட்கட்டும்.. ஜாலியன்வாலாபக் படுகொலையிலிருந்து முளைத்தெழுந்த பகத் சிங்!