உணர்வோசை

பழங்குடி மனிதனால் காட்டுக்கு ஆபத்து இல்லை ! பின்னர் வேறெந்த மனிதனால் இயற்கைக்கு ஆபத்து ?

காட்டுக்குள் பழங்குடி இருப்பதால் காட்டுக்கு ஆபத்து என சொல்லப்பட்டது. ஆனால் அனைவருக்கும் தெரியும் பழங்குடி மனிதனால் காட்டுக்கு ஆபத்து இல்லையென!

வேறெந்த மனிதனால் இயற்கைக்கு ஆபத்து?

இயற்கைக்கும் மனிதனுக்குமான முரண் அதன் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.

தொழிற்புரட்சி ஏற்பட்ட 18ம் நூற்றாண்டில் ஒரு பார்வை இருந்தது. இயற்கை அழியாது, அழித்தாலும் இயற்கை தன்னை மீட்டுருவாக்கிக் கொள்ளும் என்கிற பார்வை. பிழையான பார்வை.

அந்த பிழையான பார்வையால் இயற்கை எந்தக் கட்டுமின்றி அழிக்கப்பட்டது. எந்தவித அளவோ நிதானமோ இன்றி சூறையாடப்பட்டது. பழங்குடி வாழ்க்கைகளும் அழிக்கப்பட்டது. காரணமாக, காட்டுக்குள் பழங்குடி இருப்பதால் காட்டுக்கு ஆபத்து என சொல்லப்பட்டது. ஆனால் அனைவருக்கும் தெரியும் பழங்குடி மனிதனால் காட்டுக்கு ஆபத்து இல்லையென!

வேறெந்த மனிதனால் இயற்கைக்கு ஆபத்து?

ஒரே நேரத்தில் மனிதனை நிரப்பும் விஷயமாகவும் விலக்கும் விஷயமாகவும் இயற்கை இருக்கிறது. மலைகள், காடுகள், பாலைகள், அருவிகள், கடல்கள் என இயற்கையின் அனைத்துமே மிகப்பெரும் ஆன்ம திறப்புக்கான வழிகள்.

அத்தனை உயிர்மூச்சுகளை தனக்குள் அடக்கிக்கொண்டு காது செவிடாகும் மவுனத்தை தரும் கடல், மனிதனுக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம். அத்தனை உயரத்திலும் அமைதியாக அமர்ந்திருக்கும் மலை உங்கள் அகந்தையை சுக்குநூறாக்கும்.

ஒரு பெரும் காடு மனித மூளைக்கு சமமானது. அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகை இயக்கத்தை கொண்டிருக்கும். அந்த இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்றென இணைந்து காட்டின் மொத்த இயக்கத்தையும் நடத்திக் கொண்டிருக்கும். எளிய பார்வைக்கு ஒவ்வொரு இயக்கமும் தனியானதாகத்தான் தெரியும். காட்டின் நீராதாரங்கள், நீர்வழிப்பாதைகள், அவற்றை சுற்றிய தாவரங்கள், அதை சார்ந்திருக்கும் உயிரினங்கள் என ஒரு மிகப்பெரும் வாழ்க்கைச்சூழல் அது. அவ்வளவு சுலபமாக புரிந்துகொள்ள முடியாது. சமூகம் கட்டி இயங்கும் மனிதன் அதன் இயக்கம் புரிந்துகொள்ள, காடு சென்று காட்டை புரிதல் அவசியம்.

இயற்கைக்கு மிக அருகில் இருக்கையில் மனிதன் பதற்றம் கொள்வான். அவன் எவ்வளவு சிறியவன் என புரிந்துகொள்வான். இயற்கையின் பெருமவுனம் அவனை குலைத்து போடும். அதன் சிறு அசைவும் அவனை பெரிதாய் அசைத்து போடும்.

காடோடுதல், கடலோடுதல் எல்லாம் மனிதனுக்கு கட்டாயம் தேவை. சொல்லப்போனால் அரசுகளே அந்த ஏற்பாட்டை செய்ய வேண்டும். ஆனால் அரசுகள் அவற்றை செய்வதில்லை. காட்டில் இருக்கும் பழங்குடியினனை விரட்டுவதுதான் அதற்கு தலையாய கடமையாக இருக்கிறது. காடோட விரும்புபவனை எப்படியாவது சமவெளியிலேயே நிறுத்தி வைக்கத்தான் அது விரும்புகிறது.

இது நாள்வரை காட்டுக்குள் வசித்து வரும் மனிதனால் காட்டுக்கு ஆபத்தெதுவும் ஏற்பட்டதே இல்லை. காடோடுபவனாலும் ஏற்படுவது இல்லை. அரசு அமைத்து ஆளும் மனிதனால்தான் காட்டுக்கு மட்டுமல்ல, கடலுக்கும் மலைக்கும் நாட்டுக்குமே கூட ஆபத்து.

இயற்கை நம்மை விலக்குவதற்கு காரணம் அவன்தான்.

அவன் சொல்வதை மட்டும் கேட்டுவிடாதீர்கள்.

அந்த அரச மனிதன்தான் ஆபத்தானவன்!

Also Read: "உங்களை உயர்த்தியது கலைஞர் கொண்டுவந்த சமூகநீதிதான்" -அண்ணாமலைக்கு பாடம் எடுத்த கார்த்திகேய சிவசேனாபதி !