உணர்வோசை

"இதுதான் இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-13

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே வணக்கம்!

தமிழகம் இதுவரை எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறது. இதுவரை இப்படி ஒரு காட்சியைத் தமிழகம் பார்த்தது இல்லை!

தமிழகம் இதுவரை எத்தனையோ தலைவர்களின் வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு வாக்குறுதியை எந்தத் தலைவரும் தந்தது இல்லை!

தமிழகம் இதுவரை எத்தனையோ முதலமைச்சர் வேட்பாளர்களைப் பார்த்திருக்கிறது. இதுவரை இப்படி ஒருவர் சொன்னது இல்லை!

அப்படி ஒரு மேடை தான்: ''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்பதாகும்!

அப்படி ஒரு வாக்குறுதிதான்: ''நூறு நாட்களில் உங்கள் பிரச்னையைத் தீர்ப்பேன்" என்பதாகும்!

அப்படி ஒருவர் சொன்னதுதான்: ''நிறைவேற்றாவிட்டால் நீங்கள் என்னிடமே வந்து, என்னைக் கேள்வி கேட்கலாம்" என்பதாகும்!

இத்தகைய புதுமையான- புதுமாதிரியான -நம்பிக்கை ஊட்டும் தலைவராக உயர்ந்தும் எழுந்தும் நிற்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்!

மேடையில் வரிசையாக தலைவர்கள்! எதிரே மக்கள்! தலைவர்கள் பேசுவார்கள்! மக்கள் கேட்பார்கள்! இதுவரை பார்த்த மேடைகள் இதுதான்!

ஆனால் இன்று, மேடையில் தலைவர்! மக்கள் பேசுகிறார்கள்! தலைவர் செவி மடுக்கிறார். விளக்கம் அளிக்கிறார். உறுதியளிக்கிறார். இது கதையல்ல நிஜம்!

மக்களின் எதிர்ப்பார்ப்பு என்பது எப்போதும் ஒன்றே ஒன்றுதான். தங்கள் குறைகளை, தங்களது இழப்புகளை, தங்களது கோரிக்கைகளை யாராவது முதலில் காது கொடுத்துக் கேட்கமாட்டார்களா என்பதுதான் முதலாவது. காது கொடுத்துக் கேட்டாலே பாதி பாரம் குறைந்துவிட்டதாக மக்கள் மனநிறைவு கொள்வார்கள். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் வெற்றிச் சூட்சுமம் இதில் தான் அடங்கி இருக்கிறது.

தாய்க்குத் தெரியும், தன் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று. குறிப்பிட்ட வயது வரைக்கும் தாயே செய்து தருவாள். ஒரு கட்டம் தாண்டியதும் தனக்குத் தேவையானதை பிள்ளை கேட்கும். தாய் செய்து கொடுப்பாள். இந்தக் குடும்பக் காட்சி அரசியல் வெளியில் நடந்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் தமிழகம் பார்த்தது!

கண்ணீரோடு ஒரு குரல், கவலையோடு மறுகுரல், உணர்ச்சியோடு இன்னொரு குரல், ஏதிலியாய் அடுத்த குரல் - என ஒவ்வொருவர் கோரிக்கைக்கும் பின்னால் ஒரு உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுக்குப் பின்னால் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ''இவர் ஆட்சி அமைந்தால் நம் கவலைகள் தீரும்" என்பதே அந்த நம்பிக்கை!

எழிலரசி அதற்கு ஒரு உதாரணம். எழிலரசி என்ற பெண்ணின் தனிப்பட்ட கவலை மட்டும் தீர்ந்துவிட்டதாக பொருள் கொண்டுவிடக்கூடாது. ஏராளமான எழிலரசிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறார் அந்தப் பெண். தனது துன்பம் அனைத்தையும் அவர் சொன்னார். அரசாங்கம் அவருக்கு உதவி செய்ததாகச் சொன்ன தொகையைத் தரவில்லை. 'உங்கள் அரசாங்கம் வரும் வரை நான் காத்திருக்க முடியாது. எனக்கு உடனே தீர்வு சொல்லுங்கள்" என்று சொன்னார். 'இன்று இரவுக்குள், நாளைக் காலைக்குள் தீர்வு காண்பேன்" என்றார் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் ஆரணி கூட்டத்தை முடித்துவிட்டு, வேலூருக்கு வருவதற்குள் எழிலரசின் கணக்கில் பணத்தை போட்டுவிட்டார் பழனிசாமி. யார் முதல்வர்? பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா? என்பதுதான் இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகம்.

''ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு செய்ய முடியுமானால், ஆட்சிக்கு வந்தால் எவ்வளவோ செய்ய முடியுமே" என்று தலைவர் சொன்னார். இந்த திட்டத்தின் நோக்கே அதுதான். எல்லோரும் நினைக்கிறார்கள் மக்களின் கோரிக்கை என்றாலே பல்லாயிரம் கோடி செலவாகும் என்று. மக்கள் எதிர்பார்ப்பது அம்பானிகள், அதானிகளைப் போன்ற கோரிக்கைகள் அல்ல. அவை மிகச் சர்வசாதாரணமானவை. அவர்களுக்கு அவசியம் தேவைப்படுபவை. அந்த அவசர, அவசியத் தேவையை நிறைவேற்றிக் கொடுத்தாலே அவர்கள் கவலை மறந்து வாழ்வார்கள். அந்த நம்பிக்கையை உணர்த்தவே இந்த திட்டம். எந்த நோக்கத்துக்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதைத் தான் இந்த ஒரு வார நிகழ்வுகள் காட்டுகிறது.

''இந்த இடத்துக்கு வந்த உடனே அனைவரும் தங்கள் குறைகளை முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்திருந்தேன். அந்த முறைப்படி உங்கள் குறைகளை எழுதிக் கொடுத்திடீங்களா?

அதுக்கு... இந்த மாதிரி ஒரு ரசீது கொடுத்தாங்களா? அந்த ரசீதை வாங்கிட்டீங்களா? காட்டுங்க!அப்படி யாராவது ரசீது வாங்காம இருந்தீங்கன்னா... இந்தக் கூட்டம் முடிந்ததும் போய் ரசீதை மறக்காம வாங்கிக் கோங்க!அது சாதாரண ரசீது மட்டுமல்ல. அதை வைத்து நீங்கள் என்னைக் கேள்வி கேட்கலாம். அதற்காக உரிமை சீட்டு அது" என்று தி.மு.க. தலைவர் சொல்கிறார். இதுதான் இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி!'' என்னைக் கேள்வி கேட்கலாம்" என்ற உரிமையை மக்களிடம் கொடுத்திருக்கிறார் தலைவர். இந்த உரிமையை வழங்க ஒரு தைரியம் வேண்டும். துணிச்சல் வேண்டும். அதன் வடிவமாக எல்லா மேடைகளிலும் காட்சி அளிக்கிறார்.

''வீட்டில் நான்கு குழந்தை இருந்தால் மெலிந்த குழந்தை மீதுதான் பெற்றோருக்கு அன்பு இருக்கும். அதைப் போலத்தான் மெலிந்த குழந்தைகளை முன்னேற்ற நினைக்கிறேன்" - என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். அதைப் போலவே நானும் செயல்படுவேன்" - என்று வாக்குறுதி கொடுக்கிறார் திமுக தலைவர். இது எல்லோர்க்கும் பெய்யும் மழையாக இருக்கிறது. அனைவருக்கும் வீசும் தென்றலாக இருக்கிறது. அனைவருக்கும் ஒளிகொடுக்கும் சூரியனாய் இருக்கிறது.

இந்த நம்பிக்கைக்குக் காரணம், 100 நாட்களில் உங்களின் குறையைத் தீர்ப்பேன் என்ற ஒரு வாக்குறுதி மட்டுமல்ல. திடீரென்று நாளைக்கு காலையில் ஒருவர் எழுந்து வந்து, 'உங்கள் குறைகளை நான் 100 நாட்களில் தீர்ப்பேன்" என்று சொன்னால் மக்கள் நம்பப் போவது இல்லை. அந்த வாக்குறுதியைச் சொல்வது யார் என்று மக்கள் பார்க்கிறார்கள்.

என்ன வாக்குறுதி தரப்படுகிறது என்பதை விட முக்கியமானது, அந்த வாக்குறுதியை யார் தருகிறார்கள் என்பது!

இப்படி ஒரு வாக்குறுதியைத் தருபவரை இந்த தமிழகம் ஐம்பது ஆண்டுகளாகப் பார்க்கிறது.

தியாகத்தால் சிறையையும் நிரப்பி இருக்கிறார்.

வெற்றியால் சட்டசபையையும் நிரப்பி இருக்கிறார்.

நாட்டின் எல்லாப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவராகவும் இருந்திருக்கிறார்.

கழகப் பணியையும் தமிழகம் பார்த்துள்ளது. நிர்வாகப் பணிகளையும் தமிழகம் பார்த்துள்ளது. அந்த அரைநூற்றாண்டு காலமாகச் சிறுகச் சிறுக வளர்ந்த நம்பிக்கை தான் இன்று மாபெரும் விருட்சமாகக் காட்சி தருகிறது.

பல நூறு கோடி செலவு செய்து விளம்பரம் செய்து, 'உங்கள் பிரச்னையை 100 நாளில் தீர்ப்பேன்' என்று அவர் சொல்லவில்லை. மக்களுக்கு இது எப்படி பரவியது? அவரை நம்பும் மக்கள் தொகையை அதிகமாகி, அதிகமாகி லட்சங்கள் கோடியாகி, அந்த நம்பிக்கையை விதைத்துவிட்டது. அதனால் தான் அவரிடம் மனுக் கொடுக்க, அவரிடம் கை கொடுக்க, அவரைப் பார்க்க, அவரிடம் சொல்ல, அவர் சொல்வதைக் கேட்க மக்கள் சாரை சாரையாக வருகிறார்கள்!

'நான்' என்று தன்னை மட்டும் ஸ்டாலின் சொல்லிக் கொள்ளலாமா? சொல்லலாமா? சொல்லலாம்! அத்தகைய உறுதிமொழியைக் காப்பாற்றும் நம்பிக்கை ஒரு தலைவருக்கு இருந்தால் நிச்சயம் சொல்லலாம்!

''ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான், திராவிட சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் பணியை மேற்போட்டுக் கொண்டு..." என்று தான் பெரியாரே புறப்பட்டார்!

''இந்த அண்ணாத்துரையால் என்ன சாதித்துவிட முடியும் என்று கேட்கிறார்கள். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று நினைக்கிறார்களோ அனைத்தையும் இந்த அண்ணாத்துரையால் சாதிக்க முடியும்" என்று தான் பேரறிஞர் அண்ணா எழுந்து நின்றார்!

''நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக நான் மிதப்பேன், நீங்கள் அதில் ஏறிச் சவாரி செய்யலாம்" என்று தான் முத்தமிழறிஞர் தனது முதுகைப் படகாகக் காட்டினார்!

''உங்கள் பாரங்களை, எனது முதுகில் வைத்துள்ளீர்கள். இனி இவை எனது பாரங்கள்" என்று தளபதி மு.க.ஸ்டாலின் செய்துள்ள முழக்கம் என்பது காலத்தின் குரல். இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி!

தமிழகம் விரும்பும் ஆட்சியும் அவர் ஆட்சியே! ஆதரிப்பீர் உதயசூரியன்! நன்றி வணக்கம்!

- தொடரும்...

Also Read: "வாரிசு அரசியல் பற்றி பேச பா.ஜ.க-வுக்கு அருகதை இருக்கிறதா?" : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-12