உணர்வோசை

“நம்பிக்கை மனிதர்களின் தாய்மடி” : சென்னை பிறந்த தின சிறப்புக் கட்டுரை! #HBDChennai

சென்னை மாநகருக்கு இன்று 381வது பிறந்தநாள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் நாள் சென்னை தினமாக (Madras Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இனம் - மொழி – மதம் - சாதி பேதமற்ற சமத்துவபுரமாகத் திகழும் சென்னையின் வளர்ச்சிக்கு சென்னை மக்களின் பங்கு மகத்தானது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வாய்ப்பு தேடியும் வாழ்வாதாரம் தேடியும் வருவோருக்கு சென்னை அன்புமிகு அன்னையாகவே அரவணைக்கிறது என்றால் மிகையில்லை.

சென்னை எந்த பேரிடரிலும் மக்களை விட்டுக்கொடுக்காது போராடியுள்ளது. சென்னையின் வளர்ச்சி, மக்கள், மொழி பற்றி என பெரும்பாலும் பேசியிருப்பார்கள், எழுதியிருப்பார்கள். ஆனால் பேரிடரில் தன்னைத்தானே மீட்டுருவாக்கி மக்களின் அரணாக இருக்கும் சென்னை தான் சந்தித்த இயற்கை பேரிடர் குறித்து பேசியிருப்பது குறைவானதே!

தலைநகர் சென்னை சந்தித்த இயற்கை பேரிடர் குறித்து ஒரு தொகுப்பு!

2004-ம் ஆண்டு சுனாமியை சந்தித்த சென்னை:

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி வரை கடல் அலையின் அழகை ரசித்து வந்த மக்களுக்கு, அலையும் ஒரு நாள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாள் அது. இந்தோனேசியா சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், இந்தியப் பெருங்கடலில் ராட்சத அலைகள் எழுந்து, கடற்கரையோர பகுதிகளை துவம்சம் செய்தது.

இந்தோனேசியா உட்பட 11 நாடுகளை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் மாண்டு போனார்கள். இந்தியாவில் மட்டும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 7,941 பேரின் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன.

அதிகாலை சூரியன் கண் விழித்த நேரத்தில், மெரினா கடற்கரையோரம் ஓலம் ஓங்கி ஒலித்தது. அன்றைக்கு ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவை முதலில் தாங்கி, மீண்டு வந்தது சென்னைதான்.

அதன்பிறகு, 2015, ல் வெள்ளத்தை சந்தித்தது சென்னை:

சென்னையில் மழை என்றால் கொண்டாட்டத்தில் மூழ்கும் மக்களை, மழையே தன் மழைநீரால் மூழ்கடித்தது. 2015ம் ஆண்டு சென்னையில் சாதாரண நாட்களில் பெய்ய ஆரம்பித்த மழையும், அதன்பிறகு ஆடி ஆட்டம் போட்ட வெள்ளத்தையும் சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

இன்றும் கூட சென்னையில் குடியேற நினைப்பவர்கள் வெள்ளம் வராத ஏரியாதானே கேட்டுதான் குடியேறுகிறார்கள். அந்த அளவுக்கு வெள்ளம் வெளுத்து வாங்கியது. வெள்ளத்தால் சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் கூவமும் நிரம்பி வழிந்தது. கூவத்தின் கரையோரம் இருந்த மக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்ல அங்கிருந்தவர்களை அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் மீட்டு தங்களுடன் தங்க வைத்தனர்.

கர்ப்பிணி பெண்ணை மீட்ட இளைஞர்கள், குழந்தைகளுக்காக பால் பாக்கெட்டை தேடி தேடி கொடுத்தவர்கள், களத்தில் வந்த மீனவர்கள் என அனைவரின் பங்கையும் இன்று நினைத்தாலும் சிலிர்த்துப் போகிறது. அ.தி.மு.க அரசின் முன்னறிவிப்பு நடவடிக்கை இல்லாததால், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து நிர்கதியானார்கள். இந்த வெள்ள பாதிப்பில் இருந்தும் தம் மக்களை காத்தது சென்னை.

2016ம் ஆண்டு வர்தா புயலை சமாளித்த சென்னை.

அது இன்னும் கொடுரமானது. பல ஆண்டுகளாக பார்த்து பராமரித்து தன்னோடு வளர்த்து வந்த மரங்களை புயல் காற்றில் சென்னை பறிக்கொடுத்தது.

பருவ மழையில்லாமல் வாடி இருந்த சென்னை, எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலையில் வர்தா புயலை எதிர்க்கொண்டது. ஆனால் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு வேகமாக புயல் வீசத்தொடங்கியது.

மழை பெய்யும் என்ற இடத்தில் வரலாறு காணாத புயல் சென்னை எதிர்பாராதது. இதனால் சென்னையின் சுற்றுச் சூழலைக் காக்கும் வண்ணம் பரந்து விரிந்த பல மரங்கள் வேரோடு முறிந்து தடம் கூட இல்லாமல் சாய்ந்து போனது. கிட்டத்தட்ட 4000 மரங்கள் சாய்ந்தன. மரங்களை அகற்றும் பணியில் 8,400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னை வாசிகள் பலரும் தங்களின் கடந்த நினைவுகளை அசைப்போடும் போது தாங்கள் வளர்த்த, பார்த்து ரசித்த மரத்தை பற்றி பேசமால் நினைக்காமல் கடந்துப் போகமாட்டார்கள். இந்த புயலால் உயிரிழப்பு 20க்கும் குறைவாக இருந்தது என்பது அரசின் கணக்கு.

இறுதியாக, 2020ல் உலகம் எதிர்க்கொள்ளும் கொரோனாவை சென்னையும் எதிர்கொள்கிறது!

தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா பாதிப்பு குறையாததாலும், வாழ்வாதாரம் இழந்ததாலும் சென்னைக்கு குடிபெயர்ந்த மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கே செல்லத் தொடங்கினார்.

இந்த நிலையில் சென்னையைக் காலி செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தொழில்கள் பாதித்ததாலும் வர்த்தக முடக்கத்தாலும் இத்தகைய முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

சென்னைக்கு வந்தால் நிச்சயம் பிழைக்கலாம் என்ற நம்பிக்கையோடு வந்த கூலித் தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர், பட்டதாரிகள் சென்னை மீண்டும் தங்களை அழைக்கும் என்ற மனதுடனே சொந்த ஊருக்குச் செல்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை சென்னை நிச்சயம் காப்பாற்றும். அவர்கள் மீண்டும் சென்னையை கொண்டாடுவார்கள்.

நம்பிக்கை மனிதர்களை உருவாக்கும் சென்னை, தன்னை நம்பும் மக்களை என்றும் கைவிடாது. #HappyBirthdaytoChennai

Also Read: E-Pass பெற்று சென்னை வருவோரை கண்காணித்து தனிமைப்படுத்துக - அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!