murasoli thalayangam

நன்றி உணர்ச்சி இருக்கிறதா ராகுலுக்கு? : வினை விதைத்தால் வினையைத்தானே அறுவடை செய்ய முடியும்? - முரசொலி!

முரசொலி தலையங்கம் (09-05-2026)

நன்றி உணர்ச்சி இருக்கிறதா ராகுலுக்கு?

2018ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா அம்மையார் அழைக்கப்பட்டு இருந்தார். அவருடன் ராகுல் காந்தியும் வந்திருந்தார். அப்போது உரையாற்றிய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘’பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிகிறேன்” என்று சொன்னார். இது ராகுல் காந்திக்கு நினைவில் இருக்கிறதா?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்மொழிவதற்கு முன்னதாகவே அவர் பெயரை முன்மொழிந்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றியது வரலாறு. காங்கிரஸ் சார்பில் 9 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குப் போனார்கள். அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதிகூட கிடைக்கவில்லை. 52 இடங்களிலேயே இந்தியா முழுக்க வெற்றி பெற்றிருந்தது. அதில் 9 இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து கிடைத்தவை என்பது ராகுல் காந்திக்கு நினைவில் இருக்குமா?

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியை மேடையில் வைத்துக் கொண்டே, ‘’தமிழ்நாட்டைப் போல கூட்டணி அமைத்தால் இந்தியா முழுவதும் வெற்றி பெறலாம்” என்று சொன்னார் தலைவர் மு.க.ஸ்டாலின். அதுதான் காங்கிரஸ் மனதை மாற்றியது. அகில இந்திய காங்கிரஸ் தீர்மானமாக ஆனது.

2023 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் நாள் சென்னையில் தலைவர் அவர்களின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. காஷ்மீரத்துச் சிங்கம் பரூக் அப்துல்லா, பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வீ, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் ஆகியோர் அந்த மேடையில் இருந்தார்கள்.

அப்போது உரையாற்றிய தலைவர் அவர்கள், ‘‘2024 தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும்.

அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து – விட்டுக் கொடுத்து – பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால், ‘காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி’ என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் – என்று சொல்வதும் நடைமுறைக்குச் சரியாக வராது.இதனை பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று வெளிப்படையாகச் சொன்னார்.

பா.ஜ.க. – காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி முயற்சிகள் அனைத்துக்கும் அன்றைய தினமே முற்றுப்புள்ளி வைத்தார். அதே போல் காங்கிரசுடன் சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்பதையும் சொன்னார். இதுதான் பா.ஜ.க.வை எதிர்க்கும் அகில இந்தியத் தலைவர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கலாம் என்ற நோக்கத்துடன் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் வந்து தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். ‘காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி சாத்தியமில்லை’ என்று தலைவர் சொன்னார். இதே சிந்தனையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அவரிடமும் இதையே சொன்னார். இதே நோக்கத்துடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அவரிடமும் தலைவர் இதையே சொன்னார். இதன்பிறகு தான், மம்தாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் மனம் மாறினார்கள்.

இதுதான் அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒற்றை அணியாக அமைந்தது. 2023 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் பாட்னாவில் ‘ INDIA ‘ கூட்டணிக்கான விதை போடப்பட்டது. ‘Indian national developmental inclusive alliance’ – என்பதாகப் பெயரும் சூட்டப்பட்டது. இது ஒன்றாக இருக்காது என்று நினைத்தார்கள். பிரச்சினை ஏற்படாத வகையில் தீர்வைச் சொன்னார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘இந்தியா’ கூட்டணியில் 28 கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஓரிரு மாநிலங்கள் நீங்கலாக அனைத்திலும் ‘இந்தியா’ கூட்டணி அமைந்தது. இதுதான் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி ஆகும். தங்களுக்கு எதிராக யாருமில்லை என்ற கற்பனை உலகத்தில் இருந்த பா.ஜ.க.வை, ‘இந்தியா’ கூட்டணிதான் யதார்த்த உலகத்துக்கு அழைத்து வந்தது.

‘400 வெல்வோம், 370 பிடிப்போம்’ என்று சொன்ன பா.ஜ.க. 240 என்ற எண்ணிக்கைக்கு இறங்கியது. இதற்கான அரசியல் விதையை தமிழ்நாடுதான் விதைத்தது. புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதிகளிலும் முழுமையான வெற்றியைக் கைப்பற்றியதன் மூலமாக ‘இந்தியா’ கூட்டணியின் கோட்டையாக தமிழ்நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. மற்ற மாநிலங்களில்கூட ஒரு தொகுதி, இரண்டு தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது. ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பம்மாத்து பலிக்கவில்லை. பின்னங்கால் பிடறியில் அடிபட விரட்டப்பட்டது பா.ஜ.க.

கோவை வந்த ராகுல், ஒரு கடையில் இறங்கி இனிப்பு வகைகளை வாங்கி வந்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். ‘என் சகோதரர்’ என்று மாண்புமிகு முதலமைச்சரை அழைத்தார் ராகுல். ‘இது வரை யாரையும் நான் என் சகோதரர் என்று அழைத்ததில்லை’ என்றும் சொன்னார். இதெல்லாம் பொய் வேஷமா?

ராகுல் தனது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடந்து கொண்டாரா? இந்தக் கூட்டணியின் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியினரைத் தடுத்தாரா ராகுல்? ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வளர்ச்சியைக் கொச்சைப்படுத்தினார் ராகுலின் நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி.

அரசியல் ரீதியாக சீண்டிக் கொண்டே இருந்தார்கள் சிலர். இவர்களுக்குப் பின்னணியாக காங்கிரஸ் தலைமையே இருந்திருக்கிறது. தலை சொல்லாமல் வால் ஆடாது. இதைவிட நம்பிக்கைத் துரோகம் வேறு உண்டா?

புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அமைந்தது. தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். திருபுவனை, மங்களம், காலாப்பட்டு, ராஜ்பவன், உழவர் கரை, காரைக்கால் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டது. இத்தகைய போட்டி வேட்பாளர்கள், ராகுல் காந்தியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

இதுதான் நன்றி உணர்ச்சியின் அடையாளமா? இவ்வளவு கெட்ட எண்ணம் எந்த மனிதனுக்கும் இருக்கக் கூடாது.

வினை விதைத்தால் வினையைத்தானே அறுவடை செய்ய முடியும்?

Also Read: ”காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல.. ஜனநாயகத்தின் முக்கியப் பணி” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!