murasoli thalayangam
அண்ணா மேம்பாலம் தொடங்கி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரை.. சென்னையை வளப்படுத்திய திமுக!
முரசொலி தலையங்கம்
22.04.2026
சென்னையை வளப்படுத்திய தி.மு.க.!
தலைநகர் சென்னைக்காக 'சென்னை - சூப்பர் 6' வாக்குறுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தலைநகர் சென்னையை சீரமைத்ததும், வளப்படுத்தியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மாபெரும் அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விடுத்துள்ளார்கள்.
அனைத்து வசதிகளையும் செய்து தருவோம், சிறப்பான போக்குவரத்தை வழங்குவோம், உட்கட்டமைப்பு திட்டங்களை உரிய காலத்தில் முடிப்போம், விலங்குகளின் தொல்லைகளில் இருந்து காப்போம்,உலகளாவிய சிறப்பு மையம் உருவாக்குவோம், உலகளாவிய திறமை மையமாக சென்னையை உருவாக்குவோம்" என்று வாக்குறுதிகள் அளித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடியும், மழை நீர் வடிகால் பணிகள் 2028க்குள் முடியும் என்பது மிகமிக முக்கியமான வாக்குறுதி ஆகும். சென்னைக்குள் மீண்டும் மினி பேருந்துகள் வரப் போகிறது.குடிநீர் வழங்கல் முறைப்படுத்தப்பட இருக்கிறது. இவை அனைத் தையும் ஒரு சேர செய்ய இருக்கிறது திராவிட மாடல் 2.0 அரசு.
பல நூறு ஆண்டு காலமாக சென்னை ராஜதானியாக இருந்த இந்த நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது பேரறிஞர் அண்ணா அவர்கள். நானுறு ஆண்டு பழமை கொண்ட இந்த சென்னை மாநகரமானது ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்று எழுதப்பட்டதை மாற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் சென்னை என்று எழுதப்பட காரணமாக அமைந்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.
* அண்ணா சாலை - அண்ணா மேம்பாலம்
* கத்திபாரா பாலம்
* கோயம்பேடு பாலம்
* செம்மொழிப்பூங்கா
* நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
* டைடல் பார்க்
* 'தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு இன்று பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை
* மதுரவாயல் பறக்கும் மேம்பாலம்
* மெட்ரோ ரயில்
* கோயம்பேடு காய்கறி அங்காடி
* கோயம்பேடு பேருந்துநிலையம்
* அடையாறு ஐ.டி.காரிடார்
* நாமக்கல் கவிஞர் மாளிகை
* பாடி பாலம்
* மீனம்பாக்கம் பாலம்
* மூலக்கடை பாலம்
* மேற்கு அண்ணாநகர் பாலம்
* வியாசர்பாடி பாலம்
* தொல்காப்பியப் பூங்கா
* மீஞ்சூர் - கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
- இவை அனைத்தும் கழக ஆட்சியில் தலைநகருக்காக உருவாக்கித் தரப்பட்டவை. இன்றைய சென்னையை சிங்காரச் சென்னையாக, சீர்மிகு சென்னையாக மாற்றியவர் இன்றைய முதலமைச்சர் அவர்கள் தான். 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக அவர் வந்தார்.
"சென்னை மாநகரத்தின் தந்தை என்று சொல்வதை விட இந்த மாநகரத்தின் முதல் சேவகனாக இருப்பதையே விரும்புகிறேன்" என்று சொன்னார்.“என்னைத் தேர்ந்தெடுத்த மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று வருந்தாத அளவிற்கு-வாக்களிக்காத மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோம் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு என் பணிகள் இருக்கும்" என்று சொன்னார்.
சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பத்து பாலங்கள் அமைக்கப்பட்டது. அந்தப் பாலங்கள் மட்டும் அன்று அமைக்காமல் போயிருந்தால் இன்றைய சென்னையே டிராபிக் ஜாம் சென்னையாகத் தான் இருந்திருக்கும். : ரூ.94 கோடி மதிப்பிலான அந்தப் பாலப் பணிகளை ரூ.61 கோடிக்குள் முடித்து 33 கோடி ரூபாயை மீதப்படுத்தி கொடுத்தார். குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவும் முடித்துக் காட்டினார்.
மாநகராட்சி பள்ளிகள் என்றாலே கேவலமாக நினைத்த நிலையை மாற்றி, தரம் உயர்த்தினார். தனியார் பள்ளிகளைப் போல மாநகராட்சி பள்ளிகளில் இடம் கிடைப்பதும் சிரமம் என்ற சூழலையும் உருவாக்கினார். முதன் முதலாக மழலையர் வகுப்பு மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டது.
குப்பை இல்லாத சென்னையை உருவாக்கினார். திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சிங்கார சென்னைத் திட்டம் அமல் ஆனது. கிளீன் சிட்டி ஆனது சென்னை. இதே போன்ற ஆர்வத்தோடு இன்றைய சென்னையையும் நவீனப்படுத்தி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.
சென்னையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.
இந்த வரிசையில் மிகமுக்கியமானது வடசென்னை வளர்ச்சி திட்டம் ஆகும். இதன் மூலமாக ஒட்டுமொத்த வடசென்னைக்கும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செய்து தரப்பட்டு வருகின்றன.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வெள்ளத்தணிப்பு பணிகள் ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டதால் வெள்ள நீர் பாதிப்பிலிருந்துதடுக்கப்பட்டது. சென்னை மாநகரத்தின் பெருகிவரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாமல்லன் நீர் தேக்கம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலைக்கும் (OMR) இடையில் உள்ள கோவளம் உபவடிநிலத்தில் இந்த புதிய நீர்த்தேக்கம் அமைய உள்ளது.
மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளான சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க இயலும். இத்திட்டத்தினால் சுற்று வட்டாரத்தில் உள்ள திருவிடந்தை, கோகில மேடு, மாமல்லபுரம், திருப்போரூர் தண்டலம், பையனூர் ஆகிய பகுதிகளில் நன்னீரை தேக்கி கடல் நீர் உட்புகுதலை தடுத்து நிலத்தடி நீரின் மட்டம் மற்றும் அதன் தரம் மேம்படும். சென்னை மக்களுக்கான மாபெரும் திட்டம் இது.
இதன் தொடர்ச்சியாகத்தான் 'சென்னை - சூப்பர் 6' திட்டத்தை அறிவித்துள்ளார் சூப்பர் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
Also Read
-
மீண்டும் கழக ஆட்சி - மக்களின் எழுச்சியே சாட்சி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
தெற்காசியாவின் மாடல் மாநிலமாகத் தமிழ்நாட்டை நான் மாற்றிக் காட்டுவேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
-
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
-
“தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பாதுகாத்து நிற்பேன்; இது என்னுடைய உறுதிமொழி!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!