murasoli thalayangam

“பதவியைக் காக்க பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறியவர்தான் பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

அடிமைக் கூட்டமே அ.தி.மு.க. என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கான எந்தத் தகுதியும் அவருக்கு இல்லை.

மதுரையில் நடைபெற்ற கூட்டத்தின் முகப்பில் தந்தை பெரியார் படத்தை வைக்கக் கூடாது என்று பா.ஜ.க சொன்னதும், அதை எடுக்கத் துணிந்தவர்தான் பழனிசாமி. மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆதரவுக் கூட்டத்தில் பெரியாரும், அண்ணாவும் கொச்சைப்படுத்தப்படும் காணொலி வெளியிடப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேர் சொரணையே இல்லாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

‘திராவிடம்’ என்ற சொல் அந்தக் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. முன்னணியினர் அதனைக் கூட தடுக்கவில்லை. ‘திராவிடம் என்றால் எனக்குத் தெரியாது, புராணங்களை நான் படித்தது இல்லை’ என்று சொன்னவர்தான் பழனிசாமி. அதனால்தான் சொல்கிறோம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கான எந்தத் தகுதியும் அவருக்கு இல்லை என்று!

தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறியவர்தான் பழனிசாமி. அவரது பச்சைத் துரோகத்துக்கு பெரிய பட்டியலே இருக்கிறது.

சிறுபான்மை சமூகத்துக்கும் இலங்கைத் தமிழர்க்கும் துரோகம் இழைக்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்த கட்சிதான் அ.தி.மு.க. மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக 10 அ.தி.மு.க. எம்.பி.க்கள் அன்று வாக்களித்தார்கள்.

இவர்களோடு ‘பாட்டாளி’ அன்புமணி ராமதாசும் வாக்களித்து துரோகம் இழைத்தார். இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியது. அதாவது ஆதரித்தவர்கள் 125 பேர். எதிர்த்து வாக்களித்தவர்கள் 105 பேர். அன்புமணி மற்றும் அந்த 10 அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஓட்டுதான் குடியுரிமைச் சட்டம் நிறைவேறக் காரணம்.

அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் எதிர்த்தவர்கள் 116 பேர் என்றும் ஆதரித்தவர்கள் 114 பேர் என்றும் வந்திருக்கும். குடியுரிமைச் சட்டம் தோற்கடிக்கப் பட்டிருக்கும். 116க்கு 114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

“குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே? எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்? காட்டுங்கள்?” என்று கேட்டாரே பழனிசாமி. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021 பிப்ரவரி 20 ஆம் தேதி, குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பெரிய சட்ட மேதையைப் போல விளக்கம் அளித்தவர்தான் இந்த பழனிசாமி.

2021 செப்டம்பர் 8 அன்று,‘நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’என்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

இந்த தனித் தீர்மானத்தை சட்டமன்றத்துக்குள் இருந்து அ.தி.மு.க. ஆதரித்திருக்க வேண்டும். அல்லது தீர்மானத்தை எதிர்த்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை. வேறு ஒரு காரணத்தைச் சொல்லி முன்னதாகவே வெளிநடப்பு நாடகத்தை நடத்தி வெளியேறி விட்டது பழனிசாமியின் கட்சி.

மூன்று வேளாண் சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வந்தபோது ஆதரித்தார் இந்த பழனிசாமி. பா.ஜ.க. கூட்டணியில் அமைச்சரவையில் இடம்பெற்ற அகாலி தளம் கட்சியின் அமைச்சரே பதவி விலகுகிறார். ஆனால் பழனிசாமி ஆதரித்தார். மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடும் எட்டு மாநில விவசாயிகளை, ‘அவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள்’ என்று சொன்னவர் இவர்தான்.

‘நீட் தேர்வு வைத்தால் எழுதித்தான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று சொன்னவர்தான் பழனிசாமி.

இத்தகைய பழனிசாமிக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் ஏதும் தேறாது என்று தெரியும். அதனால் முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை பா.ஜ.க.வை ஆதரித்து விட்டு அதனை கழற்றிவிடப் பார்த்தார். பா.ஜ.க., ரெய்டு அஸ்திரத்தை எடுத்தது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரெய்டு அஸ்திரத்தை பா.ஜ.க. எடுத்தது. பழனிசாமியின் உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடந்தது. ‘எடப்பாடிக்கு செக் – உறவினர் வீட்டில் தொடரும் ஐ.டி. ரெய்டு’, ‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை ரெய்டு’, ‘எடப்பாடி உறவினர் வீட்டில் இறங்கிய ஐடி அதிகாரிகள்’, ‘எடப்பாடி உறவினர் வீட்டில் விடிய விடிய ரெய்டு’, ‘கூட்டணிக்கு குறி வைக்கப்படுகிறாரா எடப்பாடி?’, ‘வசமாக சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் உறவினர்’, ‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் சிக்கியது என்ன?’, ‘ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர்’, ‘உறவினரின் வரி ஏய்ப்பு – எடப்பாடிக்கு சிக்கல்’, என்று ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டன. பா.ஜ.க.வுடன் முழு சரணாகதி அடைந்துவிட்டார் பழனிசாமி.

இவர், ‘அ.தி.மு.க. கூட்டணி’ என்று சொல்வார். ஆனால் பிரதமரும், உள்துறை அமைச்சரும், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்பார்கள். ‘நான்தான் முதலமைச்சர்’ என்று பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, இவர் பெயரைச் சொல்ல பிரதமர் தயாராக இல்லை.

இத்தகைய சூழலில் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு பா.ஜ.க.வை வர வைத்து பழனிசாமியால் பேச்சுவார்த்தை நடத்த முடிந்ததா? இல்லை. இவர்தான் வாரம் தோறும் டெல்லிக்குப் போய் அமித்ஷா வீட்டில் காத்துக் கிடக்கிறார். பா.ஜ.க.விடம் தனக்கு இடங்களைப் பிரித்துக் கேட்பது போல இருக்கிறது இவர் செய்கை.

எந்தத் தகுதியும் இல்லாதவர் பழனிசாமி என்பது தினந்தோறும் வெளிச்சத்துக்கு வருகிறது. கூவத்தூரில் சசிகலா காலில் விழுந்ததால் மட்டுமே முதலமைச்சர் ஆனவர் அவர். அவர் தலைமைக்கு கட்சி வந்த பிறகு கட்சியின் செல்வாக்கை தரைமட்டத்துக்கு தாழ்த்தினார். தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் தலைதாழ வைத்தார். இப்போது அ.தி.மு.க. என்ற கட்சியையே பா.ஜ.க.விடம் அடமானம் வைத்துவிட்டார். இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, எந்தத் தேர்தலிலும் அவரால் அதனை மீட்க முடியாது.

Also Read: “வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!