murasoli thalayangam
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் அடிபணிந்த பிரதமர் மோடி : யார் கொடுத்த உரிமை இது? - முரசொலி!
முரசொலி தலையங்கம் (06-02-2026)
அடிபணிந்த பிரதமர் மோடி!
இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு இது போன்ற வரியை அவர் விதித்தார். இதனை உலகின் பல நாடுகள் கண்டித்தன. எதிர்த்துள்ளன. விமர்சித்தன. பதில் நடவடிக்கைகளில் இறங்கின. ஆனால் இதில் எதையும் செய்யவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு.
இப்படி வரி விதிப்பதை நிறுத்த வேண்டுமானால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்த நிபந்தனையை எதிர்த்தாவது ஒன்றிய பா.ஜ.க. அரசு கருத்துச் சொல்லி இருக்க வேண்டும். மாறாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று நாள் கடத்திக் கொண்டு இருந்தார்கள்.
ஒன்றரை ஆண்டு கால கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு பிப்ரவரி 2 ஆம் தேதியன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து விருப்பங்களுக்கும் முழு சம்மதம் தெரிவித்து அடிபணிந்து விட்டார் பிரதமர் மோடி.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார். இனிமேல் அமெரிக்காவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கும். வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம். இந்த நடவடிக்கைகள் உக்ரைன் போரை நிறுத்த உதவி செய்யும்.
பிரதமர் மோடியுடன் எனக்கு நட்புறவு நீடிக்கிறது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நாங்கள் ஒப்புக் கொண்டோம். இதன்படி இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு இனி 18 சதவீத வரியை மட்டுமே விதிக்கும். அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் விளைபொருட்கள், நிலக்கரி மற்றும் இதர பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவு மேலும் வலுவடையும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு ஒப்பந்தத்தை அறிவிக்கும் முறை இதுதானா? இருநாட்டுத் தரப்பும் இணைந்து அறிவிக்க வேண்டாமா? அத்தகைய உரிமையை டிரம்புக்கு கொடுத்ததன் மர்மம் என்ன?
“நமது எரிசக்தி பாதுகாப்பை நாமே தீர்மானிப்போம்’’ என்று சொல்லி வந்தோமே அது என்ன ஆனது? ‘இந்தியா எங்களிடம் வாங்க வேண்டும்’ என்றுகூட கோரிக்கை வைக்கலாம். ‘இன்னாரிடம் வாங்கக் கூடாது’ என்று நிபந்தனை விதிக்கும் உரிமையை யார் வழங்கியது?
‘’ இந்தியா ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் கொள்முதலை கணிசமாகக் குறைத்துவிட்டது.” என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவுக்கு முழுமையாகத் தலையாட்டுவதற்கு முன்பாகவே, அவர்களது விருப்பங்களை அடிபணிந்து அமல்படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.
விவசாயப் பொருட்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் கூறியிருப்பது மிகவும் மோசமான நடவடிக்கை ஆகும். ”நமது விவசாயிகளின் நலன்களில் எவ்விதச் சமரசமும் செய்து கொள்ளப்படாது’’ என்று ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி பேசியதை பொய்க்காக்கும் நடவடிக்கை ஆகும் இது.
அமெரிக்காவின் வேளாண்மைச் செயலாளர், “நாங்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வோம், எங்கள் (அமெரிக்க) விவசாயிகளுக்கு இதனால் பெரிய லாபம் கிடைக்கப்போகிறது” என்று சொல்லி இருக்கிறார். அப்படியானால் இந்திய விவசாயிகள் நஷ்டம் அடையப் போகிறார்கள் என்றுதானே பொருள்? அமெரிக்க உணவுப் பொருட்கள், பழங்கள், பால் பொருட்கள் போன்றவை மலிவான விலையில் இந்தியச் சந்தைக்குள் வரும். அமெரிக்க விவசாயிகளைக் காக்க டிரம்ப் முயற்சிக்கிறார். ஆனால் இந்திய விவசாயிகளை கைவிடுகிறார் மோடி.
டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், ‘’அமெரிக்கப் பொருட்கள் மீதான அனைத்து வரி மற்றும் வரி அல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும்’’ என்று கூறி இருக்கிறார். அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா விதிக்கும் வரி பூஜ்ஜியமானால், அது மிகப்பெரிய தலைகீழ் மாற்றமாகும். அதனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்..
இதற்கான எந்த விளக்கமும் இல்லாததாக பிரதமர் மோடியின் பதிவு உள்ளது. ‘’ இந்தியப் பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 140 கோடி இந்தியர்களின் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.
சந்தேகங்கள் எதற்கும் விளக்கம் அளிக்காத நன்றிப் பதிவு இது. எனவேதான் இது அச்சம் தருகிறது. இதனை மிகச்சரியாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ‘’ பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார். அமெரிக்காவில் அதானி மீது ஒரு வழக்கு உள்ளது. உண்மையில் அது மோடி மீதான வழக்கு. எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் வெளியிடப்படாத கோப்புகள் உள்ளன. இவை இரண்டும் அழுத்தத்துக்கான காரணிகள். இதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்” என்று ராகுல் சொல்லி இருக்கிறார்.
மோடி பிம்பம் கிழியத் தொடங்கி இருக்கிறது.
Also Read
-
NDPC விரிவாக்கம் முதல் 25 லட்சம் கோடி கடன் பற்றாக்குறை வரை.. திமுக எம்.பி-க்கள் அடுக்கடுக்கான கேள்வி!
-
3 மாவட்ட தேவஸ்தான திருக்கோயில்களுக்கு அரசு மானியம்... ரூ.36 கோடிக்கான காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் முதல் நீதித்துறை தரநிலைகள் வரை.. - திமுக எம்.பி-க்கள் கேள்வி!
-
ரூ.100 கோடியில் முடிவுற்ற பணிகள் முதல் ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம் வரை... முதலமைச்சர் அசத்தல்!
-
மீண்டும்... மீண்டும்.. அன்று பார்க்.. இன்று சிவகாசி.. ரயில் நிலையம் மூலம் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசு!